Afghan: ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். கமாண்டரை கொன்ற தலிபான்கள்
Afghanistan: கடந்த ஆண்டு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் ஆப்கன் சற்றே நிலைகுலைந்துதான் போயிருக்கிறது.
ஆப்கானிஸ்தானின் தலைநகரில் தூதரக அதிகாரிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கூறப்படும் ஐஎஸ் அமைப்பின் கமாண்டரை தலிபான் படைகள் கொன்றதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
ஆகஸ்ட் 2021 இல் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு ஆப்கானிஸ்தானில் வன்முறை சற்றே குறைந்தது.
ஆனால், கடந்த ஆண்டு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் ஆப்கன் சற்றே நிலைகுலைந்துதான் போயிருக்கிறது.
தலிபான் படைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு நடவடிக்கையின் போது பிராந்திய ஐஎஸ் "உளவுத்துறை மற்றும் செயல்பாட்டுத் தலைவர்" காரி ஃபதேவைக் கொன்றதாக தலிபான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்தார்.
ஃபதே "இராஜதந்திர பணிகள், மசூதிகள் மற்றும் பிற இலக்குகளுக்கு எதிராக காபூலில் சமீபத்திய நடவடிக்கைகளுக்கு நேரடியாக மூளையாக செயல்பட்டார்" என்று முஜாஹித் கூறினார்.
ஆப்கன் தலைநகர் காபூலின் கைர் கானா பகுதியை தளமாகக் கொண்ட செல்களுக்கு எதிரான நடவடிக்கையில் மேலும் ஒரு ஐஎஸ் உறுப்பினர் கொல்லப்பட்டதாக முஜாஹித் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்களும் துப்பாக்கி சண்டை நடந்த சப்தத்தை கேட்டதாக தெரிவித்தனர்.
தலிபான் அதிகாரிகள் இதுதொடர்பாக காணொலியையும் டிவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஃபடேவை முக்கியமான ஐ.எஸ். கமாண்டர் என கடந்த ஆண்டு ஜூலையில் அறிவித்தது.
இந்தியா, ஈரான், மத்திய ஆசியாவில் தீவிரமாக அவர் செயல்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. காபூல் ஹோட்டல் மீது டிசம்பர் மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தி 5 சீன குடிமக்களை காயப்படுத்தியதற்கு ஐஎஸ் பொறுப்பேற்றது. டிசம்பரில், காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மீது ஐ.எஸ். குழு தாக்குதல் நடத்தியது. அதை அதன் தூதர் மீதான "கொலை முயற்சி" என்று ஐ.எஸ் அமைப்பு தெரிவித்தது.
ஜனவரியில், காபூலில் வெளியுறவு அமைச்சகம் அருகே ஒரு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக ஐ.எஸ் அமைப்பு அறிவித்தது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் ரஷ்ய தூதரக ஊழியர்கள் இருவர் தற்கொலை குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
டாபிக்ஸ்