Senthil Balaji case: செந்தில் பாலாஜி வழக்கு; ED-க்கு சிக்கல்..சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்!
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்குமாறு அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றியதை எதிர்த்து அமலாக்கத்துறையின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அமர்வு முன்பு இன்று நடைபெற்றது.
ட்ரெண்டிங் செய்திகள்
அப்போது, செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு மீது உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றத்தை சந்தேகிக்க முடியாது? என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போது அவரை காவலில் எடுக்க முடியுமா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தேவையெனில் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை முறையிடலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உடல்நிலை சரியில்லை என மருத்துவக் குழு சான்றிதழ் அளித்த பின் அவரை காவலில் எடுக்க கோருகிறீர்களா?, சிகிச்சை முடிந்த பின் விசாரணை நடத்த வேண்டியது தானே எனவும் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், கைதான 15 நாட்களுக்குள் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்பதால் காவலில் எடுக்க அனுமதிக்க வேண்டும். செந்தில் பாலாஜிக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சையே கேள்விக்குறியாக உள்ளது. விசாரணையை தாமதப்படுத்தவே இது போன்று செய்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையில் கேவியட் மனுத்தாக்கல் செய்த செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதயத்தில் இருக்கும் 4 அடைப்புகளை எப்படி போலியாக காட்ட முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சந்தேகிக்க முடியாது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது அதிருப்தியை அளிக்கிறது. ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க உள்ளதால் நாங்கள் இதில் தலையிட விரும்பவில்லை. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை பார்த்த பின் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும். தற்போதைய நிலையில் உயர் நீதிமன்றம் விசாரிப்பது சரியாக இருக்கும் என்று கூறிய நீதிபதிகள் வழக்கை ஜூலை 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்