‘இளம் வயதில் இறந்த மகன்’ – இப்படி நினைவுகூர்ந்து வரும் பெற்றோர்
QR Code Created : இளம் வயதில் மகனை இழந்தாலும், அவனது வாழ்க்கை மற்ற இளைஞர்களுக்கு உந்துதலாக இருக்க வேண்டும் என ஐவினின் பெற்றோர் எண்ணினர். அதற்காக ஐவினின் சகோதரி இவ்லின் பிரான்சிஸ் யோசனைப்படி, குறியாச்சிரா செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் உள்ள ஐவின் கல்லறையில் க்யூஆர் கோடு ஒன்றை பதித்துள்ளனர்.
ஒருவர் இறந்த பின்னர் அவரது நினைவாக நினைவகங்கள் அமைப்பது, அவரது பெயரில் அறக்கட்டளைகள் துவங்கி இயலாதவர்களுக்கு உதவுவது, அவர்களின் பெயரில் கட்டிடங்கள் எழுப்பி அதை எளியவர்கள் நிகழ்ச்சிகளுக்கு இலவசமாக பயன்படுத்திக்கொள்ள அனுமதிப்பார்கள், அவர்களின் நினைவு நாளில் அன்னதானம் செய்வது என பல்வேறு நல்ல காரியங்களை செய்து இறந்தவர்களை நினைவு கூறுவார்கள். இறந்தவர்கள் எந்த வயதினராக இருந்தாலும் அவர்களை நாம் வாழ்க்கை முழுவதும் நினைவுகூர்ந்துகொண்டேதான் இருப்போம்.
ட்ரெண்டிங் செய்திகள்
இளம் வயதினர் இறந்தால், அவர்களின் பெற்றோர் உயிரோடு இருந்தால், தங்கள் வாழ்நாள் முழுவதுமே அவர்களுக்கு இறந்த குழந்தையின் நினைவுகள் இருந்துகொண்டேயிருக்கும். கேரள மாநிலம் திருச்சூரில் இறந்த தங்களின் மகனை நினைவுகூறும் விதமாக இந்த பெற்றோர் என்ன செய்திருக்கிறார்கள் என்று பாருங்கள்…
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குறியாச்சிரா பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ். ஓமனில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது மனைவி லீனா, ஓமனில் இந்திய பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியையாக உள்ளார். இவர்களது மகன் ஐவின் பிரான்சிஸ், டாக்டராக பணியாற்றி வந்தார். கடந்த 2021ம் ஆண்டு ஐவின் பேட்மின்டன் விளையாடும்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று இறந்துவிட்டார். இறந்தபோது அவரின் வயது 26 தான். ஐவின் டாக்டராக மட்டுமின்றி இசை, விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். சிறந்த மருத்துவராகவும் சமூகத்தில் பிரபலமாக அறியப்பட்டார்.
இளம்வயதில் மகனை இழந்த பெற்றோர் கடும் துயரில் வாடிவந்தார்கள்.
இளம் வயதில் மகனை இழந்தாலும், அவனது வாழ்க்கை மற்ற இளைஞர்களுக்கு உந்துதலாக இருக்க வேண்டும் என ஐவினின் பெற்றோர் எண்ணினர். அதற்காக ஐவினின் சகோதரி இவ்லின் பிரான்சிஸ் யோசனைப்படி, குறியாச்சிரா செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் உள்ள ஐவின் கல்லறையில் க்யூஆர் கோடு ஒன்றை பதித்துள்ளனர். இந்த க்யூஆர் கோடை ஸ்மார்ட் போனில் ஸ்கேன் செய்தால், ஐவினின் புகைப்படம், கல்லூரியில் அவரது நிகழ்ச்சிகள், நண்பர்கள் வட்டம், கீபோர்டு, கிடார் நிகழ்ச்சிகள் மற்றும் அவரைப் பற்றிய பிற விவரங்கள், ஆக்கப்பூர்வமான பணிகளை தெரிந்து கொள்ளலாம். இதற்காக தனியாக ஒரு இணையதளத்தையும் பிரான்சிஸ் குடும்பத்தினர் உருவாக்கி உள்ளனர்.
‘ஐவின் பல நபர்களின் தகவல்களை க்யூஆர் கோடுகளாக உருவாக்கி எனக்கு அனுப்பி வைப்பார். அதைபோல, க்யூஆர் கோடு மூலம் ஐவினின் நினைவுகளுக்கு உயிரூட்ட விரும்பினோம். அதற்காக ஐவினைப் பற்றிய அத்தனை தகவல்களையும் தொகுத்து க்யூஆர் கோடாக உருவாக்கி கல்லறையில் பதித்துள்ளோம். ஐவினின் வாழ்க்கை மற்ற இளைஞர்களுக்கு ஓர் உந்துதலாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இதனை நாங்கள் செய்துள்ளோம்‘ அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இளம் வயதில் மகனை இழந்த சோகத்தில் இருந்து மீள அவர் குறித்த விவரங்களுடன் அவரது நினைவுகளை மீட்டும் க்யூஆர் கோட் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை அளிக்கட்டும்.
டாபிக்ஸ்