Senthil Balaji Case: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செல்லும்: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையின் பலகட்ட விசாரணைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14-ல் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையின் போது நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டு பின்னர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ட்ரெண்டிங் செய்திகள்
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் மத்திய சிறை மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். முன்னதாக செந்தில் பாலாஜி சட்டவிரோதக் காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
இதையடுத்து இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நடந்து வந்தது. இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி சி.வி.கார்த்திகேயன் வழங்கிய தீர்ப்பில், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. அவரது கைது சட்டப்படியானது. ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல, அவரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த வாரம் விசாரணையை முடித்தனர்.
இந்நிலையில், செந்தில் பாலாஜி வழக்கில் இன்று காலை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அதில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தது சட்டவிரோதம் இல்லை. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவுக்கு தடையில்லை என்றும், கைது செய்த பிறகு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது எனவும் கூறி, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12 வரை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்