ரியல் Man vs Wild...அமேசான் காடுகளில் புழுக்களை தின்று உயிர் வாழ்ந்த மனிதர்
நண்பர்களுடன் பயணம் சென்ற நபர் வடக்கு பொலிவியா பகுதியில் வழிதவறி அமேசான் மழை காடுகளில் சிக்கியுள்ளார். ஒரு மாத காலம் வரை அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து பூச்சி, புழுக்களை தின்று உயிர் பிழைத்து தப்பித்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அந்த நபர் தனது திகில் அனுபவத்தை விளக்கியுள்ளார்.
இயற்கை விரும்பிகளுக்கும், வனவிலங்கு ஆர்வலர்களுக்கு கனவு இடமாக அமேசான் காடுகள் உள்ளன. இங்கு இருக்கும் பல்லுயிர் வாழ்வியல் சூழ்நிலை காரணமாக உலகின் மிகப் பெரிய வெப்பமண்டல மழைக்காடாக உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த காடுகளில் எந்த அளவு அதிசியங்களும், ஆச்சர்யங்களும் நிறைந்துள்ளனவோ, அதே அளவில் ஆபத்துகளும், அபாயங்களும் உள்ளன. இந்த மழைக்காடுகளுக்கு செல்லும்போது வழி தவறிவிட்டால், அது அவர்களின் உயிருக்கே மிகப் பெரிய ஆபத்தாக அமைந்துவிடும். இந்த சூழலில் உயிர் வாழ்வதென்பது மிகவும் கடினமானது மட்டுமல்லாது, உயிரை பனையம் வைக்கும் செயலாகவே இருக்கும்.
இப்படி ஒரு அசாத்திய சூழ்நிலையை கொண்ட அமேசான் மழை காடுகளில் 30 வயதை சேர்ந்த பொலிவியா நாட்டை சேர்ந்த மனிதர் ஒரு 31 நாள்களாக புழு, பூச்சிகளை தின்று உயிர் வாழ்ந்துள்ளார். இப்படியொரு வழக்கத்துக்கு மாறான சூழ்நிலையில் அவர் உயிர் பிழைத்துள்ளார் என்று கூறுவதே சரியாக இருக்கும்.
ஜொனாட்டன் அகோஸ்டா என்ற அந்த நபர், தனது நண்பர்களுடன் அமேசான் மழைக்காடு பகுதிகளுக்கு ஜாலி பயணமாக சென்றுள்ளார். அப்போது அவர்கள் சென்ற பாதையிலிருந்து தவறி அமேசான் மழைக்காடு பகுதிக்குள் சென்றுவிட்டார். காடு பகுதிக்கு உள்ளே சென்ற அவர் அங்கிருந்து எப்படி வெளியேறுவது எனத் தெரியாமல் தவித்துள்ளார்.
இதற்கிடையே காணாமல் போயிருந்த ஜொனாட்டன் அகோஸ்டாவை நண்பர்கள், குடும்பத்தினர் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக தேடி வந்தனர். சுமார் 30 நாட்கள் கடந்த நிலையில் தற்போது அவரை உள்ளூர் வாசிகள் மீட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவர், காட்டில் உயிர் தப்பித்த கதையை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
காட்டில் புழு, பூச்சிகளை தின்று உயிர் வாழ்ந்து வந்த அவர், தனது ஷூக்களை பயன்படுத்தி மழை நீரை பிடித்து பருகியுள்ளார். அத்துடன் ஜாகுவார் போன்ற வனவிலங்குகளிடமிருந்து தற்காத்துக்கொள்வதற்கு பல்வேறு மறைவான இடங்களில் இருந்து தப்பித்துள்ளார்.
இறுதியாக வழிதேடி நீண்ட தூரம் நடந்த அவர் ஒரு புதரின் அருகே காணப்பட்டார். அவரது கணுக்கால் திசை மாறிய நிலையில், உடலில் நீரிழப்பும் ஏற்பட்டுள்ளது. சுமார் 17 கிலோ எடை குறைந்த அவர், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மழை காடுகளில் உயிர் பிழைத்த தனது திகில் அனுபவம் பற்றி ஜொனாட்டன் அகோஸ்டா கூறியதாவது, " புழுக்கள், பூச்சிகளை மட்டும் தின்று உயிர் வாழ்ந்தேன். உயிர் பிழைப்பதற்காக நான் செய்த விஷயங்களை அனைத்தையும் கூறினால் நம்ப மாட்டீர்கள்" என்றார் மிரட்சியாக.