Kerala : கர்ப்பமடைந்த முதல் திருநங்கை - அடுத்த மாதம் ஜூனியர் கம்மிங்
நான் தாயாக வேண்டும் என்ற எனது கனவையும், தந்தையாக வேண்டும் என்ற அவரது கனவையும் நாங்கள் நனவாக்க உள்ளோம். எட்டு மாத கரு இப்போது அவர் வயிற்றில் உள்ளது என ஜியா பவல் தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் முதல் முறையாக கேரளாவில் திருநங்கை ஒருவர் கர்ப்பமடைந்துள்ளார். அடுத்த மாதம் குழந்தை பிறக்க உள்ளதாக அந்த தம்பதி மகிழ்ச்சியாக அறிவித்துள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் திருநங்கைகளான ஜஹாத் மற்றும் ஜியாபவல் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக ஒன்றாக இணைந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த மகிழ்ச்சியான தம்பதியினருக்கு அடுத்த மாதம் குழந்தை பிறக்க உள்ள தகவல் வெளியாகி உள்ளது. இது இந்தியாவில் முதல் முறையாக ஒரு திருநங்கை கர்ப்பமாக இருப்பதாக கருதப்படுகிறது. இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை நடனக் கலைஞரான ஜியா பவல் தனது இன்ஸ்டா கிராமில் அறிவித்துள்ளார். தனது நண்பனான ஜிஹாத் தற்போது 8 மாத கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த ஜோடி வரும் மார்ச் மாதம் தங்கள் குழந்தையை பெற்றெடுக்கும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இவர்கள் தான் முதல் திருநங்கை குழந்தை பெற்றெடுக்கும் பெற்றோர் ஆவர். ஜியா ஆணாக பிறந்து பெண்ணாகவும் ஜஹாத் பெண்ணாக பிறந்து ஆணாகவும் மாறினர். அவர்கள் இருவரும் தங்கள் திருநங்கை அடையாளம் குறித்து அறிந்தவுடன் குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்கின்றனர்.
இது குறித்து திருநங்கை பவல் தனது இன்ஸ்டாகிராம் பதிவில்,"நான் தாயாக வேண்டும் என்ற எனது கனவையும், தந்தையாக வேண்டும் என்ற அவரது கனவையும் நாங்கள் நனவாக்க உள்ளோம். எட்டு மாத கரு இப்போது அவர் வயிற்றில் உள்ளது. நாங்கள் அறிந்ததிலிருந்து இது இந்தியாவில் முதல் திருநங்கை ஆணின் கர்ப்பம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் பிறப்பாலும் உடலாலும் நான் பெண்ணாக இல்லாவிட்டாலும், குழந்தை என்னை அம்மா என்று அழைப்பதைக் கேட்க வேண்டும் என்ற பெண்மையின் கனவு எனக்குள் இருந்தது. நாங்கள் ஒன்றாக இருந்த 3 வருடங்கள் கடந்துள்ளது. தற்போது தான் என் கனவு போல அம்மா ஆகப்போகிறேன். அவர் தந்தை ஆக வேண்டும் என்று கனவு காண்கிறார். இன்று அவரின் முழு சம்மதத்துடன் 8 மாத கரு அவர் வயிற்றில் நகர்கிறது"என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நாங்கள் ஒன்றாக வாழ தொடங்கிய போது எங்கள் வாழ்க்கை மற்ற திருநங்கைகளிலிருந்து வித்தியாசம் அடைந்ததாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம்.
பெரும்பாலும் திருநங்கைகள் சமூகம் மற்றும் குடும்பத்தால் புறக்கணிக்கப்படுகிறார்கள். நாங்கள் எங்களுக்கு பிறகும் ஒரு நபர் இருக்க வேண்டும் என்று விரும்பினோம். முதலில் ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்பினோம். ஆனால் திருநங்கை என்பதால் சட்ட நடவடிக்கைகள் எங்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. என உள்ளூர் ஊடகங்களில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆதரவளித்த அவரது குடும்பத்திற்கும், மருத்துவர்களுக்கும் ஜவாத் பவல் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் குழந்தையை பெற்றெடுத்த பின் ஜஹாத் ஆணாக மாறுவதற்கான தனது பயணத்தை தொடர்வார் என்று கூறப்படுகிறது.
ஜவாத் ஏற்கனவே இரண்டு மார்பகங்களையும் அகற்றியதால் மருத்துவக் கல்லூரியில் உள்ள தாய்ப்பால் வங்கியில் இருந்து குழந்தைக்கு உணவளிக்க உள்ளதாக ஜியா பவல் தெரிவித்துள்ளார்.
டாபிக்ஸ்