கோடை வருது! கூடவே நுங்கின் ‘மந்திரக் கொடை’யும் வருது! என்னவெல்லாம் தெரியுமா?…
கோடைக்காலத்தில் கிடைக்கக்கூடிய நுங்கின் நன்மைகள் குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.
கோடைக்காலம் என்றாலே சுட்டெரிக்கும் வெயில், ஆறாக ஊற்றெடுக்கும் வியர்வை, நாளுக்கு இரண்டு முறை குளித்தாலும் கசகசவென பிசுபிசுக்கும் உடல்தான் ஞாபகம் வரும்.
ட்ரெண்டிங் செய்திகள்
ஆனால் அதே கோடையில் பாலைவனச்சோலை போல மக்களுக்காக இறைவன் அளித்த வரம்தான் பனை மரத்தின் நுங்குகள்.
கோடைக்காலத்தில்தான் நுங்குகள் காய்க்கும். பெரும்பாலும் சாலையோரக் கடைகளிலும், தள்ளுவண்டிகளிலும்தான் இந்த நுங்கு விற்கப்படும். இப்படி விற்கப்படுவதால் இதன் மதிப்பை குறைத்துக் கூறிவிட முடியாது.
ஏனென்றால் நுங்கில் அவ்வளவு நிறைந்த மருத்துவப் பலன்கள் அடங்கியுள்ளன.
டஜன் 100 ரூபாய் என்று கூவி விற்றாலும் அதன் பல நூறு டஜன் கணக்கில் மக்களுக்கான நன்மைகள் நிறைந்துள்ளன. அதுபற்றி விரிவாகப் பார்க்கலாம்.
கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை நுங்கு போதியமட்டும் அளிக்கிறது. உடல்சூடு காரணமாக எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் அடங்காத தாகத்தையும் தணிக்கும் ஆற்றல் உண்டு.
கோடைக்காலத்தில் சன் ஸ்ட்ரோக் எனப்படும் மூளை பாதிப்பினால் ரோட்டில் திடீரென மயங்கி சாய்ந்து இறந்து விடுவார்கள். காரணம் உஷ்ணத்தின் காரணமாக உடலில் நீர்ச்சத்து குறைந்து குறிப்பாக மூளையில் நீர்ச்சத்து வறண்டு போவதால் இந்த மரணம் ஏற்படுகிறது. இதைத் தடுக்க ஒரேயொரு நுங்கு சாப்பிட்டால்கூட போதும். நீர்ச்சத்து உடலில் ரீசார்ஜ் ஆகிவிடும். நுங்கிலிருந்து எடுக்கப்படும் பதநீரைக் குடித்தால் நீர்ச்சத்து நிரம்பி உடல் குளிர்ந்து விடும். மரணத்துக்கு பயமில்லை.
கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும். மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் பிரச்னைகள் ஏற்படாது. ரத்த சோகை உள்ளவர்களுக்கு நுங்கு அருமருந்தாகும். கர்ப்பிணிகளுக்கும் ரத்தம் அதிகரிக்கச் செய்யும்.
பெண்களுக்கு நுங்கு இதுபோல் நிறைய நன்மைகளைச் செய்கிறது. நுங்கில் நிறைந்துள்ள அந்த்யூசைன் என்ற வேதிப் பொருள் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் கட்டிகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.
அதுமட்டுமல்லாமல், வெயில்காலத்தில் பரவும் அம்மை நோய்களைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை பெருக்கி உடலை சுறுசுறுப்பாக்கும்.
வெப்பம் காரணமாக அதிக வியர்வை ஏற்பட்டு தோன்றக்கூடிய வியர்க்குரு மீது நுங்கில் உள்ள நீரை எடுத்துப் பூசினால் வியர்க்குரு சட்டென மறைந்து விடும். வேதனை நீங்கும். சருமத்தில் ஏற்படும் வேனல் கொப்புளங்களையும் நுங்கின் நீர் ஆற்றும்.
உடலில் உள்ள ஊளைச்சதை, தேவையற்ற கொழுப்பைக் கட்டுப்படுத்தி உடல் பருமனைக் குறைக்கும் ஆற்றல் நுங்குக்கு உள்ளது.
நுங்கில் உள்ள நீர் பசியைத் தூண்டக்கூடியது. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு இரண்டுக்குமே மருந்தாகப் பயன்படுகிறது.
வயிற்று அல்சரைக் குணமாக்கும் திறன் நுங்குக்கு உண்டு.
நுங்கில் நிறைந்த கொழுப்பு சத்து உள்ளது. இதனால் குழந்தைகளுக்கும் நல்லது. அதேநேரத்தில் குழந்தைகளுக்குத் தரும்போது இளம்நுங்காகப் பார்த்துத் தரவேண்டும்.
கல்நுங்கில் அதிக சத்து உள்ளது. ஆனால் அதை செரிக்கும் திறன் குழந்தைகளுக்குக் கிடையாது. இதனால் கடுமையான வயிற்று வலி உண்டாகலாம். பெரியவர்களும் ஒரு கல்நுங்குக்கு மேல் சாப்பிடக்கூடாது.
நுங்கு சாப்பிடுவதே ஒரு கலை. குழந்தைகளுக்கு அதன் தோலை மென்மையாகப் பிரித்து நுங்கு உடைந்து விடாமல் நீரை அவர்களை சுவைக்க வைத்து பின் சாப்பிடத் தாருங்கள்.
பெரியவர்கள் எப்போதுமே நுங்கை தோலுடன் சாப்பிட்டுப் பாருங்கள். தோலிலும் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளன. அதிலுள்ள துவர்ப்பு சுவை உடலுக்கு மிகவும் நல்லது.
உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், ஜிங்க் எனப்படும் சாம்பல் சத்து போன்ற கனிமச்சத்துகள், வைட்டமின் பி நிறைந்துள்ளது. மலிவு விலையில் கிடைக்கும் இத்தனை பலன்கள் உண்மையில் இயற்கை தந்த பனைமர நுங்கின் 'அருட்கொடை' தானே!
டாபிக்ஸ்