TTF Vasan: கோர்ட்டில் தஞ்சமடைந்த TTF வாசன்..ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்த நீதிபதி!
டிடிஎஃப் வாசன் ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக தாக்கல் செய்த மனுவை காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
போக்குவரத்து விதிகளை மீறிய வழக்கில் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனுவை காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்தது.
ட்ரெண்டிங் செய்திகள்
கோயம்புத்தூரைச் சேர்ந்த பிரபல பைக் ரைடரான டிடிஎஃப் வாசன், விலை உயர்ந்த பைக்குகளில் ஊர் ஊராக பயணம் செய்து தன்னுடைய அனுபவங்களை யூடியூபில் பதிவேற்றி வெளியிட்டு வருகிறார். இதற்காக 'Twin Throttlers' என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர் அதிவேகமாக பைக்கை ஓட்டி சிறுவர்கள், இளைஞர்களை கவர்ந்துள்ளார். இவருக்கு சினிமா நடிகர்களை போல் ஏராளமான ரசிகர்களும் உள்ளனர். இவரது யூடியூப் சேனலுக்கு பல லட்சத்துக்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். அதோடு 2k கிட்ஸூம் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.
அதிவேகமாக பைக்குகளை ஓட்டி, சாலை விதிகளை மீறிய புகாரின்பேரில் டிடிஎஃப் வாசன் மீது ஏற்கனவே பலமுறை போலீசார் நடவடிக்கைக்கு எடுத்துள்ளனர். அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு அபராதமும் கட்டியிருக்கிறார். இந்தச் சூழலில் தான் காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மக்களை அச்சுறுத்தும்படி பைக் ஓட்டியபோது விபத்தில் சிக்கினார் டிடிஎஃப் வாசன். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையடுத்து டிடிஎஃப் வாசன் மீது காஞ்சிபுரம், பாலுசெட்டி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல், பிறர் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட ஜாமீனில் வெளிவரமுடியாத 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
மேலும், டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தமிழக போக்குவரத்துத்துறை பரிந்துரை செய்துள்ளது. இதற்கிடையில் சென்னையில் உள்ள நண்பர் அபீஸ் என்பவரின் வீட்டில் பதுங்கியிருந்த டிடிஎஃப் வாசனை காஞ்சிபுரம் போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.
இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி வாசன் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் தர மறுத்ததோடு அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டிடிஎஃப் வாசன் தனக்கு ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக நீதிமன்றத்தை நாடி இருந்தார். நீதிமன்ற
அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று மீண்டும் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். டிடிஎப் வாசனை அக்டோபர் 3ம் தேதி வரை சிறையில் அடைக்க காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்