Chennai: கர்ப்பிணி மனைவிகளுக்காக கை வைத்த கொள்ளையர்கள்; காட்டிக்கொடுத்த சிசிடிவி.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!
கர்ப்பிணி மனைவிகளின் மருத்துவ செலவுக்காக திருடிய வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையை அடுத்த மடிப்பாக்கம் வேம்புலி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராம்குமார். கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
ட்ரெண்டிங் செய்திகள்
கடந்த மாதம் 1 ஆம் தேதி இவர் தன்னுடைய வீட்டைப்பூட்டி விட்டு மனைவியுடன் மதுரை சென்றுவிட்டார். இந்த நிலையில் அவர் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா திடீரென்று திரும்பி இருப்பதை பார்த்து சந்தேகமடைந்த லண்டனில் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் இது குறித்தான தகவலை ராம்குமாருக்கு சொல்லி இருக்கிறார்.
இதனையடுத்து உடனடியாக அவர் வீட்டை வந்து பார்த்தார். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 1 1/2 பவுன் தங்கநகைகள் மற்றும் 200 கிராம் வெள்ளி பொருட்கள், டிவி ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் பிரங்க் டி ரூபன் தலைமையிலான தனிப்படை தீவிர விசாரணை நடத்தி பெருங்குடியை சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 23) மற்றும் அவருடைய நண்பரான மற்றொரு ரஞ்சித் (23) ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில் ஏற்கனவே இவர்கள் 2 பேர் மீதும் தரமணி, வேளச்சேரி, துரைப்பாக்கம் காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து 2 பேரிடமும் போலீசார் மேலும் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் நண்பர்களான இவர்கள் 2 பேரின் மனைவிகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமுற்று இருந்தனர். ஆகையால் இருவரும் பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளனர்.
மருத்து சிகிச்சை சரிவர கிடைக்காத காரணத்தால் ஒருவரின் மனைவிக்கு கரு கலைந்து விட்டது. அவர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். மற்றொருவரின் மனை விக்கு சமீபத்தில்தான் குழந்தை பிறந்தது. இதனால் தங்கள் மனைவிகளின் மருத்துவ செலவுக்கு பணம் தேவைப் பட்டதால் நண்பர்கள் இருவரும் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. கைதான 2 பேரிடம் இருந்தும் 4 கிராம் தங்கநகை, 100 கிராம் வெள்ளி, டி.வி., லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
டாபிக்ஸ்