தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Malikappuram Crew Met The Press In Chennai

Malikappuram: மாளிகப்புரம் எப்படிப்பட்ட படம்.. படக்குழு ஓபன் டாக்!

Divya Sekar HT Tamil
Jan 24, 2023 12:25 PM IST

என்னுடைய திரைத்துறையில் மாளிகப்புரம் மிக முக்கியமான படம் என நடிகர் உன்னி முகுந்தன் தெரிவித்துள்ளார்.

மாளிகப்புரம்
மாளிகப்புரம்

ட்ரெண்டிங் செய்திகள்

அதன்படி வரும் ஜனவரி 26 ஆம் தேதி தமிழில் ‘மாளிகப்புரம்’ வெளியாக உள்ளது. இதையொட்டி, படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது இப்படத்திற்கு இரண்டு பாடல்கள் எழுதிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “இந்த மாதிரி படத்திற்கு நான் பாடல் எழுதுவேன் என்று நினைக்கவில்லை. அதற்கு ஐயப்பனின் அருள் தான் காரணம் என்று நினைக்கிறேன். நான் திரைப்பட கல்லூரியில் படிக்கும்போது, என்னுடன் படிக்கும் மாணவனுக்கு மூளையில் கட்டி. இரவு நேரத்தில் நானும், என் நண்பனும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.

மருத்துவர் மண்டை வெடிக்கப் போகிறது என்று கூறினார். அவருடைய பெற்றோர்கள் ஊரில் இருக்கிறார்கள். அப்போது, என்னுடைய நண்பன் ஐயப்பனுக்கு வேண்டுதல் வைத்தார். இவனுக்கு சரியாகிவிட்டால், நாங்கள் மூவரும் மாலைபோட்டு சபரிமலைக்கு வருகிறோம் என்று வேண்டினான். அவன் பிழைத்துவிட்டான். இன்றுவரை நன்றாக இருக்கிறான்.அந்த சம்பந்தமோ என்னவோ .. இப்படதிற்கு நான் பாட்டு எழுதும்படியாகி உள்ளது. ஆனால் என்னால்தான் இன்றுவரை சபரிமலைக்கு செல்ல முடியவில்லை.

மாளிகப்புரம் படக்குழு
மாளிகப்புரம் படக்குழு

என்னால் முடிந்த அளவிற்கு பாடல் எழுதியிருக்கிறேன். இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக டைட்டில் ரோலில் நடித்த குழந்தை தேவ நந்தாவின் முகபாவனைகள் தான் பாடல் எழுத உந்துதலாக இருந்தது. உன்னி முகுந்தன் சிறப்பாக நடித்திருக்கிறார். எடுத்த வேலையை கண்ணும் கருத்துமாக பணியாற்றுவதில், தமிழில் வசனம் எழுதிய எனது தம்பி பிரபாகரனுக்கு ஈடாகாது.

இப்படத்தை தைரியமாக தயாரித்த தயாரிப்பாளருக்கு வாழ்த்துகள். இப்போது வரும் பெரிய திரைப்படங்களில் உணர்வு ரீதியாக இயக்குவதில்லை. அந்த வகையில் மாளிகப்புரம் உணர்வுபூர்வமாக இருக்கிறது. பலரும் திரையரங்கிற்கு செல்வதற்கு பயப்படுகிறார்கள். ரசிகர்களின் பயங்கரவாதம் ஒழிந்தால் தான் திரைப்படம் ஆரோக்கியமாக இருக்கும். பாரதிராஜா படங்கள், சின்னக் கவுண்டர் போன்ற படங்கள் போல் உணர்வு ரீதியான பல படங்கள் எதிர்காலத்தில் வர வேண்டும்.சம்பத் ராம் ஐயப்பனுக்கே வில்லனாக நடித்திருக்கிறார், வாழ்த்துக்கள்” என்றார்.

கதாநாயகன் உன்னி முகுந்தன் பேசும்போது, ”மாளிகப்புரம் என்னுடைய மற்ற படங்களைப் போல் வெறும் திரைப்படம் மட்டுமல்ல. இதுவரை 30 படங்களில் நடித்திருக்கிறேன். அதில் மிக முக்கியமான படமாக மாளிகப்புரம் இருக்கும். இந்த படத்திற்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

எனக்கு ஒரு நல்ல குடும்ப படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. நானும் ஐயப்பன் பக்தன் தான். இறுதிக் காட்சியில் என்னை மாற்றிக் கொள்ளும் அருமையான காட்சியைக் கொடுத்திருக்கிறார்கள். இந்த வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. அபிலாஷ்-க்கும் நன்றி. இப்படத்தை தமிழில் விநியோகிக்கும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக ரவிக்கு நன்றி.

மாளிகப்புரம் படக்குழு
மாளிகப்புரம் படக்குழு

ஒரு சிறுமி ஐயப்பன் கோவிலுக்கு போக வேண்டும் என்று ஆசைப் படுகிறாள். அவர் எப்படி சென்று வருகிறாள் என்பதே படத்தின் ஒருவரி கதை. தேவ நந்தா மற்றும் குட்டிபையன் என்னுடன் 50 நாட்கள் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் வாழ்த்துகள். தேவநந்தாவுக்கு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற ஆசை இருப்பதாக கூறினார். அதற்காக அவருடைய அப்பாவிற்கு வாழ்த்துகள்.

12 வருடங்களுக்கு முன்பு சீடன் படத்திற்காக இங்கு வந்தேன். அப்போது தனுஷ் சாருடன் சிறந்த அனுபவம் கிடைத்தது. அந்த படத்திற்கு ஆதரவு கொடுத்தது போல் இந்த படத்திற்கும் ஆதரவு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

நடிகர் சம்பத் ராம் பேசும்போது “நான் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிறது. அதில் இந்த படத்தில் நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்த படத்தில் அனைவரும் விரதம் இருந்து தான் படப்பிடிப்பு நடத்தினோம். 6 முறை இப்படத்தை பார்த்தேன். 6 முறையும் கண்கள் கலங்கியது.

உன்னி சார் படப்பிடிப்பு இல்லாத நாட்களிலும் படபிடிப்பு தளத்திற்கு வந்து அனைத்து பணிகளையும் செய்வார். இப்படத்திற்கு தூணாக இருந்தது இசையும், பின்னணி இசையும் தான். இந்த படத்திற்கு எங்களின் கடின உழைப்பு வீண் போகவில்லை” என்றார்.

நடிகர் சந்தீப் பேசும் போது,” நான் பேசும் முதல் மேடை இது. என்னுடைய முதல் படம் தூங்கவனம். நீண்ட வருடங்களாக இதே பிரசாத் லேப் எதிரில் இருக்கும் டீ கடையில் தான் டீ குடிப்போம். அப்போது, இதன் டைரக்டர் விஷ்ணு, நான் ஒரு படம் இயக்கினால் நிச்சயம் நீ இருப்பாய் என்று கூறினான். இந்த படம் மிகப் பெரிய வெற்றியடைந்ததில் மகிழ்ச்சி.

மாளிகப்புரம் படக்குழு
மாளிகப்புரம் படக்குழு

விக்ரம் ஆதித்யன் மலையாளத்தில் முதல் படம். அந்த படம் உன்னி சாருக்கு பெரிய திருப்புமுனையாக இருந்தது. அதன் பிறகு இந்த படத்திலும் அவருடன் நடித்திருக்கிறேன். அந்த குழந்தை மக்களிடம் பேசும்போது 25 வயதிற்குரிய பக்குவம் இருக்கிறது. அது கடவுள் கொடுத்த வரம் என்று நினைக்கிறேன்” என்றார்.

தமிழுக்கு வசனம் எழுதிய வசனகர்த்தா வி.பிரபாகர் பேசும்போது,”இந்த படம் எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு. தயாரிப்பாளர் ஆன்றோ ஜோசப் என்னை அழைத்து எழுத சொன்னார். அபிலாஷ் பற்றி முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன். கடாவர் போன்ற படங்களின் கதாசிரியர் , இந்த படத்தை எப்படி எழுத முடிவெடுத்தார் என்று ஆச்சர்யமாக இருந்தது. அவர்களின் உழைப்பிற்கு நானும் ஒரு கை கொடுத்திருகிறேன்.

இந்த படத்தை முதல் படத்தில் பணியாற்றியது போல தான் செய்தேன். இறுதிவரை உன்னி முகுந்தனை ஐயப்பனாக நினைக்க வைக்க வேண்டும். அதை பொறுப்புடன் செய்திருக்கிறேன். சிவாஜி சாருடன் பணியாற்றியிருக்கிறேன். பிரபு சாருடனும் பணியாற்றியிருக்கிறேன். அதேபோல் விக்ரம் பிரபுவுடனும் பணியாற்றுவேன். இந்த மாதிரி எல்லா ஜெனரேசனுடனும் பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. சந்தீப்-க்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு தான் நன்றி கூற வேண்டும்”என்றார்.

மாளிகப்புரம் படக்குழு
மாளிகப்புரம் படக்குழு

மாக்கெட்டிங் ஹெட் விபின் பேசும்போது, “இந்த படம் பக்தி, யுக்தி இரண்டும் கலந்திருக்கும். கேரளாவில் குழந்தைகளும், முதியோர்களும் அதிகளவில் திரையரங்கில் வந்து பார்க்கிறார்கள். நீண்ட வருடங்களாக வராமல் இருந்த முதியவர்கள் அதிகம் வந்து கொண்டே இருக்கிறார்கள்.

மற்ற படங்களை கம்பேர் பண்ணவில்லை. நாளுக்கு நாள் திரையரங்கமும், இலாபமும் உயர்ந்து வருகிறது. அதேபோல், தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றிபெற வேண்டும். ஜனவரி 26ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது. மாபெரும் வெற்றிபெற வேண்டும்” என்றார்.

இசையமைப்பாளர் ரஞ்சன் ராஜா பேசும்போது, “கடாவர் படத்திற்கு பிறகு இரண்டாவதாக இந்த மேடையில் நிற்கிறேன். குழுவாக சேர்ந்து உழைத்தோம். முக்கியமாக ஐயப்பனின் அருளால் தான் மாபெரும் வெற்றியடைந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.

இசை எல்லா இடத்திலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. என்னுடைய தமிழ் படம் கடாவர் ஓடிடியில் வெளியாகியது. நிறைய வாழ்த்துகள் குவிந்தது. அதேபோல், இந்த படமும் வெற்றியடைய வேண்டும்”என்றார்.

மாளிகப்புரம் படக்குழு
மாளிகப்புரம் படக்குழு

சிறுமி தேவ நந்தா பேசும்போது, “இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. அதேபோல், இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு நன்றி. அனைவரும் மாளிகப்புரம் படத்தை திரையரங்கிற்கு வந்து பார்த்து மாபெரும் வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி” என்றார்.

வசனகர்த்தா அபிலாஷ் உன்னி பேசும்போது, “ சந்தீப் கூறியதுபோல நானும் டீ குடித்திருக்கிறேன். 20 வருடங்களாக திரையரங்கிற்கு வராதவர்கள் தான் திரையரங்கிற்கு அதிகளவில் வருகிறார்கள். 3 தலைமுறைகளும் சேர்ந்து வருகிறார்கள். சினிமாவில் ஒரு கதாநாயகன் நடித்தால், அவருடைய பகுதிகளை மட்டும் பணியாற்றி செல்வார்கள்.

ஆனால், உன்னி இந்த படத்தின் வெற்றிக்காக கடுமையாக உழைத்திருக்கிறார். இப்படம் என்னுடைய 4வது படம். நான் எழுதும் கதைக்கு நான் நினைக்கும் விதமாகத்தான் உணர்வுகளை பதிவு செய்வேன்.

சிறுமி தேவ நந்தா
சிறுமி தேவ நந்தா

ஆனால், இறுதிக் காட்சியில் அந்த குழந்தை படியில் கால் வைக்கும்போது எத்தனை முறை பார்த்தேன் என்று தெரியவில்லை. இதற்கு உயிரூட்டியது இசையமைப்பாளர் ரஞ்சன் தான். இந்த கதையை நான் இயக்கியது ஐயப்பன் அருளால் தான். கூடவே எனது பெற்றோர்களின் ஆசிர்வாதமும் இருக்கிறது.

சபரிமலைக்கு சென்றவர்களுக்குத் தெரியும். ஆபத்தான இடங்களில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். சைஜோன் நன்றாக நடித்திருக்கிறார். கேரள திரையரங்கில் அவர் அடி வாங்கும் காட்சியில் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரின் கண்களிலும் கண்ணீர் வந்தது.

சம்பத் ராம் சார் கேரளாவிற்கு வந்தால் அடி நிச்சயம். அந்த அளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார். கொடூரமான வில்லனாக நடிக்க வேண்டும் என்று கூறினேன். ஆனால், நான் கூறியதற்கு மேலாக அவர் நடித்திருக்கிறார். தமிழ்நாட்டில் சிறந்த படங்களை விநியோகம் செய்வதற்கு தயங்கமாட்டார்கள்.

சபரிமலையில் இறுதிக் காட்சி படப்பிடிப்பின் போது டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவி அங்கு வந்திருந்தார். அதன்பிறகு, தமிழ்நாட்டில் விநியோகம் செய்வதற்கு அவரிடம் பேசலாம் என்று கூறும்போது இதுவும் ஐயப்பன் செயல் தான் என்று தோன்றியது” என்றார்.

படத்தின் நாயகன் உன்னி முகுந்தன்
படத்தின் நாயகன் உன்னி முகுந்தன்

தமிழில் சூர்யா - ஜோதிகா நடித்த #பேரழகன் படத்தை டைரக்ட் செய்த சசி சங்கரின் மகன் விஷ்ணு சசி சங்கர் டைரக்ட் செய்த முதல் படம் இது. அவர் பேசும்போது, “ மேடையில் எனக்கு பேசத் தெரியாது.

பிரசாத் லேப்-ற்கு வரும்போது எனது தந்தையின் நினைவு வந்தது. முதன்முதலாக என்னுடைய அப்பாவுடன் தான் இங்கு வந்தேன். காதாசிரியர் சொன்னது மாதிரி நானும் எதிர் கடையில் டீ குடித்தேன். இப்பட தயாரிப்பாளர்களான பிரியா வேணு, வேணு குந்தம்பள்ளி அவர்களுக்கு நன்றி.

இந்த படம் உன்னி முகுந்தனை நோக்கி பயணிக்கும். அவருக்கு நன்றி. தமிழ்நாட்டில் இருக்கும் அனைவரின் ஆசிர்வாதங்களும் கிடைக்கும் என்று நம்புகிறேன். தமிழ்நாடு என்னுடைய இரண்டாவது வீடு” என்றார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்