Captain Miller: வனத்தில் விதிமீறல்.. உச்சக்கட்ட கோபத்தில் கலெக்டர்.. தனுஷின் கேப்டன் மில்லர் தற்போதைய நிலை என்ன?
தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நடந்த கேப்டன் மில்லர் படப்பிடிப்புக்கு தற்காலிக தடை விதித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.
‘ராக்கி’ ‘சாணிக்காயிதம்’ உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். இவரது இயக்கத்தில் தற்போது தனுஷ் நடித்து வரும் திரைப்பட‘கேப்டன் மில்லர்’.
ட்ரெண்டிங் செய்திகள்
ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்த திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் தெலுங்கு முன்னணி நடிகர் சிவராஜ்குமார், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பிற்காக வனப்பகுதியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பால் வன விலங்குகள் பாதிக்கப்படுவதாகவும், வன விலங்குகள் அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறுவதாகவும் குற்றசாட்டு எழுந்தது. மேலும் படப்பிடிப்பு நடத்த உரிய அனுமதி பெறவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நடந்த கேப்டன் மில்லர் படப்பிடிப்புக்கு தற்காலிக தடை விதித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். மாவட்ட நிர்வாகம், தீயணைப்புத் துறை மற்றும் வனத்துறை அனுமதி பெறாத காரணத்தால் படப்பிடிப்புக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் பேசும் போது, “ படக்குழு திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கினர். அந்த அனுமதியை பயன்படுத்தி தென்காசியில் உள்ள இடங்களிலும் அவர்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் போலீஸ் பாதுகாப்பையும் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். போலீஸ் அதிகாரிகள் பாதுகாக்கப்பட்ட இடங்களில் குண்டு வெடிப்புகள், துப்பாக்கிச்சூடு உள்ளிட்டவற்றை நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தியும் உள்ளனர். இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நடத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.” என்றார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான தீர்வு ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு படப்பிடிப்பு இன்று காலை 9 மணி துவங்கி நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
டாபிக்ஸ்