Actor RKSuresh: ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு; 15 கோடி வாங்கிய RK சுரேஷ்.. குற்றப்பத்திரிகையில் பகீர் தகவல்!
ஆர்.கே. சுரேஷ் ரூ 15 கோடி வாங்கியதாக போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திகையில் தெரிவித்திருக்கின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் பல கிளைகளை கொண்டது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகமானது சென்னை அமைந்தகரையில் அமைந்து இருக்கிறது. இந்த நிலையில் ஆருத்ரா கோல்டு ட்ரேடிங் என்ற நிறுவனத்தின் சார்பில், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் தோறும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக விளம்பரபடுத்தப்பட்டது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த விளம்பரத்தை பார்த்த பலர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இதன் மூலம் ரூ 2,438 கோடி பணம் வசூலிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பொதுமக்களிடம் வசூலித்த பணத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் சம்பந்தப்பட்ட நிறுவனம் திருப்பித்தராமல் இழுத்தடித்தாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தாமாக முன்வந்து நிறுவனத்தின் இயக்குநர்கள் 14 பேர் மீதும் ஆருத்ரா பெயரில் இயங்கிவந்த 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
தலைமறைவு
இந்த வழக்கு தொடர்பாக இயக்குநர்கள் பாஸ்கர், செந்தில் குமார், அய்யப்பன், மோகன்பாபு, நாகராஜ், ரூசோ, பாஜக நிர்வாகி ஹரிஷ், ராஜா, மாலதி உள்ளிட்ட 11 பேர் பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் பாஜகவின் ஓபிசி பிரிவு மாநிலத் துணைத் தலைவராக வரும் ஆர்.கே. சுரேஷூக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் இந்த வழக்கில் தனக்குத் தெரிந்தவர்களை அவர் காப்பாற்ற முயற்சி செய்ததாகவும் சொல்லப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து ஆர்.கே. சுரேஷ் வங்கிக் கணக்கிற்குப் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டதும் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த நிலையில் ஆர்.கே.சுரேஷை விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்ட்டது. ஆனால் அவர் ஆஜராக வில்லை. மாறாக வெளிநாட்டிற்குச் சென்று தலைமறைவானார். இதனிடையே அவர் தரப்பில், சம்மனை ரத்து செய்ய உத்தரவிட வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்தது.
அதனைத்தொடர்ந்து ஆ.கே.சுரேஷ் உட்பட 4 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பிய பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் சுரேஷின் வங்கிக் கணக்குகளை முடக்கினர்.
ஆர்.கே. சுரேஷ் ரூ 15 கோடி
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் நடிகர் ஆர்.கே. சுரேஷ் ரூ 15 கோடி வாங்கியதாக போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திகையில் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த விவகாரத்தில் 500 முகவர்களுக்கு சம்மன் அனுப்ப போலீசார் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இவர்கள் மூலம் 800 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டு இருக்கிறது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
டாபிக்ஸ்