Marlon Samuels: ஒன்றல்ல நான்கு முறை விதிமீறல் - மர்லான் சாமுவேல்ஸை குற்றவாளியாக அறிவிப்பு
வெஸ்ட் இண்டீஸ் அணி வென்ற இரண்டு டி20 உலக கோப்பை தொடரிலும் அணியின் முக்கிய வீரராக இருந்து வந்த பேட்டிங் ஆல்ரவுண்டர், மர்லான் சாமுவேல்ஸ் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த சர்ச்சையில் அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு மோசமான காலகட்டமாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டில் டி20 உலக கோப்பை தொடரில் பிரதான சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டில் வரும் அக்டோபர் நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒரு நாள் உலக கோப்பை தொடருக்கான தகுதி சுற்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது.
ட்ரெண்டிங் செய்திகள்
ஒரு காலத்தில் உலக அணிகளை பேட்டிங், பவுலிங், பீல்டிங் என ஆல்ரவுண்ட் ஆட்டத்தால் மிரட்டிய ஜாம்பவான் வீரர்களை கொண்டிருந்த அணியாக வெஸ்ட் இண்டீஸ் இருந்தது. இரண்டு முறை ஒரு நாள் உலக கோப்பை, 2 முறை டி20 உலக கோப்பை வென்றிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி மீது தற்போது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அனுதாப பார்வை வெளிபட தொடங்கியுள்ளது.
ஏற்கனவே டி20 உலக கோப்பை தொடர், ஒரு நாள் உலக கோப்பை தொடர் தகுதி இழப்பு என சோதனையில் இருந்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மற்றொரு இடியாக அந்த அணியின் முன்னாள் வீரரான மர்லான் சாமுவேல் மீது எழுந்த சூதாட்ட புகாரில் அவர் குற்றவாளி என தீர்ப்பு வந்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 உலக கோப்பை வென்ற 2012, 2016ஆம் ஆண்டுகளில் அணியின் முக்கிய வீரராக இருந்து வந்தவர் சாமுவேல். சொல்லப்போனால் 2012 உலக கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் சாமுவேல் அதிரடி பேட்டிங் மற்றும் பவுலிங்கால் மட்டுமே சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதையடுத்து சாமுவேல் மீது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சூதாட்ட புகார் வெளிவந்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதற்கு முன்னர் 2019ஆம் ஆண்டு இவர் அபுதாபி டி10 லீக்கில் விளையாடியுள்ளார். அப்போது கிரிக்கெட் சட்ட விதிகளை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் முன்வைக்கப்பட்டது. சூதாட்ட புகார் மீது இழுத்தடிப்பு செய்ததாக இவர் மீது கிரிக்கெட்டில் ஊழலுக்கு எதிரான தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.
கிரிக்கெட் ஊழல் தடுப்பு விதியின்படி, 750 டாலருக்கு மேல் பரிசு பொருளாகவோ அல்லது வேறு வழியிலோ தொடரில் விளையாடிக் கொண்டிருக்கும் போது வீரருக்கு பணம் வந்தால், அது குறித்து தொடரை நடத்தும் அமைப்புக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால் சாமுவேல் அதை நான்கு முறை மீறியதோடு, அது குறித்து விசாரணைக்கும் ஒத்துழைப்பு தர மறுத்ததாக கூறப்பட்டது.
இந்த புகார் 2021ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்த நிலையில், தற்போது இவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் இனி எந்த வகை கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்படலாம் என தெரிகிறது.
சாமுவேல் சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே 2008இல் கிரிக்கெட் விளையாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக பணம் மற்றும் பிற வெகுமதிகளை பெற்றதற்காக அவருக்க இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடையும் விதிக்கப்பட்டது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 71 டெஸ்ட், 207 ஒரு நாள், 67 டி20 போட்டிகளை விளையாடியுள்ளார். தனது நீண்ட நெடிய சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் 11, 134 ரன்கள், 152 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்