தமிழ் செய்திகள்  /  Astrology  /  Security Is Tight Ahead Of Tiruvannamalai Karthigai Deepam Festival

Karthigai Deepam: திருவண்ணாமலையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் காவல்துறை!

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 06, 2022 12:57 PM IST

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு அந்த மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணிகள் உச்சத்தில் உள்ளது.

திருவண்ணாமலை தீபத் திருவிழா
திருவண்ணாமலை தீபத் திருவிழா

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக மகா தீபத் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது தளர்வு செய்யப்பட்டுள்ளதால் மகா தீபத் திருவிழாவைக் காண்பதற்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாகப் பக்தர்களின் வருகைக்காகச் சிறப்புப் பேருந்துகள் மற்றும் ரயில்கள் விடப்பட்டிருந்தன. தற்போது வரை திருவண்ணாமலைக்கு இந்த போக்குவரத்து வசதிகள் மூலம் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர்.

பக்தர்களின் வருகை அதிகரித்துக் கொண்டே இருக்கின்ற காரணத்தினால் மாவட்ட நிர்வாகம் மற்றும் தூய்மை பணியாளர்கள் சாலைகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் காவல்துறையினர் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை நகருக்குள் வரும் அனைத்து பாதைகளிலும் சோதனைச் சாவடிகள் அமைத்து உரியச் சோதனை நடத்தப்பட்ட பின்னரே வாகனங்கள் நகருக்குள் அனுமதிக்கப்படுகிறது. திருவிழாவின் போது பக்தர்களுக்கு இடையூறாக காவல்துறையினர் வாகனங்கள் அடிக்கடி சென்று வருவதாகப் புகார் எழுந்து வந்தது, அதன் அடிப்படையில் இவ்வாறு காவல்துறையினர் பக்தர்களுக்கிடையே சென்று வருவதைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

WhatsApp channel