பூலோக வைகுண்டமான ஸ்ரீ வைகுண்டநாதர் கோயில்!
தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ வைகுண்டநாதர் திருக்கோயில் குறித்து இங்கே காண்போம்.
108 திவ்யதேசங்களில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் கோயில் ஸ்ரீ வைகுண்டநாதர் கோயில். இந்த கோயில் திருநெல்வேலியிலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் தாமிரபரணி ஆற்றங்கரையின் வடகரையில் அமைந்துள்ளது.
வைகுண்ட நாதர் ஆலயத்தில் 136 அடி ராஜகோபுரமும், ஒன்பது நிலைகளுடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. இந்த கோயிலில் சந்தான கருடன், லட்சுமி நரசிம்மன், மணவாள மாமுனிகள் ஆகியோர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் மூலவரான வைகுண்ட நாதருக்கு நாள்தோறும் 6 கால பூஜைகள் நடத்தப்படுகின்றன. இந்த கோயிலின் மிகப் பிரமாண்டமான 136 அடி முகப்பு கோபுரம்தான் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய கோபுரம் என்று போற்றப்படுகிறது.
இந்த கோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றால் மிகப்பெரிய மண்டபமும் அதன் நடுவே காட்சி மண்டபமும் அமைந்துள்ளன. கோயில் வளாகத்தில் உள்ள திருவேங்கடமுறையான் சன்னதி மிகுந்த சிற்ப வேலைப்பாடுகளுடன் மிக உயரமாகக் காட்சி அளிக்கிறது.
கோயிலின் உள்ளே உற்சவர் ஸ்ரீ கண்ணபிரான் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சியளிக்கிறார். தனித்தனி சன்னதிகளில் வைகுண்ட நாதநாயகி மற்றும் சோரநாதநாயகி உள்ளார்கள். இந்த ஆலயத்தில் திருமணம் ஆகாத பெண்கள் 21 நாள் நீராஞ்சனம் செய்து மூலவரை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம்.
மேலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தினால் வேலை கிடைக்கும் என்று நீதிமன்ற வழக்குகளில் சுமூகத் தீர்வு கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்த கோயிலில் சித்திரைத் திருவிழாவானது பத்து நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
தெப்பத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. விழாவின் ஒன்பதாவது நாளில் திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெறும். ஆலயத்தில் நடைபெறும் நடை காலை 7:00 மணி முதல் 12 மணி வரை மாலை 5 மணி முதல் 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.