திருத்தியமலை ஸ்ரீ ஏக புஷ்ப பிரியநாதர் கோயில்
ஸ்ரீ ஏக புஷ்ப பிரியநாதர் திருக்கோயிலின் சிறப்பம்சங்கள் குறித்து இங்கே காண்போம்.
தாயினும் நல்லாள் சமேத ஸ்ரீ ஏக புஷ்பம் பிரிய நாதர் திருக்கோயில். திருச்சியிலிருந்து முசிறி செல்லும் வழியில் சித்தப்பிரமை உள்ளிட்ட குறைபாடுகளைப் போக்கும் திருத்தலமான குணசீலத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது திருத்திய மலை.
கருங்கற்களால் உருவான சுவர் அமைப்பு. படிகளில் ஏறிச் சென்றதும் வலப்புறம் அழகான சுனையைக் காணமுடியும். குன்றின் தளத்தில் தனிச்சன்னிதிகளுடன் கூடிய பிரகாரம் கொண்டதாக அமைந்திருக்கிறது திருக்கோயில். தெய்வானை சகித முருகப்பெருமான் சத்ரு சம்ஹார கோலத்தில் சன்னதி கொண்டிருக்கிறார்.
கோயிலுக்குள் நுழைந்தால் அங்கும் பல்வேறு மூர்த்தங்கள் உள்ளன. அடுத்த சன்னதியில் மகாலட்சுமி காட்சியளிக்கிறார். தொடர்ந்து நந்தியுடன் கூடிய காசிவிஸ்வநாதர் விசாலாட்சி சன்னதி உள்ளது.
தங்களது வாகனங்களுடன் கூடிய நவக்கிரக நாயகர்கள் தனிச்சன்னிதியாக உள்ளது. சிவாலய காவலரான பைரவர், நாய் வாகனத்துடன் காட்சியளிக்கிறார். மூலஸ்தானத்தில் லிங்கத் திருமேனியில் காட்சி தருகிறார் ஏகபுஷ்பிரியநாதர் அபூர்வமான திருநாமம் இது.
பெரிய லிங்கத் திருமேனியில் காட்சி தருகிறார் சிவபெருமான். மானாமதுரை அருகிலுள்ள திருபுவனத்தில் பூவன நாதர், பூண்டியிலே புஷ்பவனேஸ்வரர் என்றெல்லாம் பெயர் கொண்டு ஆலயம் கண்ட பெருமான் இக்கோயிலில் ஏகபுஷ்பபிரிய நாதராகக் காட்சி தருகிறார்.
பெருமானுக்கு ஒரே ஒரு தாமரை மலரைச் சமர்ப்பித்தல் வலம் வந்து வழிபட்டால் அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றத் தருகிறார் என்கிறார்கள் பக்தர்கள். தொழிலில் வளர்ச்சி, திருமணம் கைகூட என பல்வேறு வேண்டுதல்களுடன் பக்தர்கள் வருகிறார்கள்.
தொடர்ந்து ஏழு திங்கட்கிழமைகளில் ஏகபுஷ்பபிரிய நாதருக்குத் தாமரைப்பூ சமர்ப்பித்த நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பலன்கள் எளிதில் கைகூடும் என்பது ஐதீகம்.