புரட்டி போட்ட வெள்ளம்..தூத்துக்குடி மக்களுக்கு தீர்வு கிடைக்குமா? - 6 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்தது தமிழக அரசு!
Dec 22, 2023, 05:09 PM IST
தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் 6 பேரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இதுதொடர்பாக கூடுதல் தலைமை செயலர் / வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
டி.கார்த்திகேயன், செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை - தூத்துக்குடி மாநகராட்சி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி
- தரேஸ் அகமது, அரசு செயலர், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை- ஏரல், ஆவரங்காடு, இடையர்காடு, சிறுதொண்டநல்லூர், ஆறுமுகமங்கலம், மாங்கோட்டகுப்பம், சம்படி மற்றும் சம்படி காலனி.
- ஆல்பி ஜாண் வர்க்கீஸ், மேலாண்மை இயக்குநர், பெருநகர போக்குவரத்து கழகம் - மேல மங்கலகுறிச்சி, கீழமங்கலகுறிச்சி, அகரம், மஞ்சள்நீர்காயல், பழையகாயல், முக்காணி, கொற்கை, உமரிக்காடு.
- பொன்னையா, இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் - ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி மற்றும் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம்.
- தினேஷ் ஆலிவர் பொன்ராஜ், பதிவுத்துறைத் தலைவர் - ஆழ்வார்திருநகரி பேரூராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
- கிரண் குராலா, இயக்குநர்- பேரூராட்சிகள், வரதராஜபுரம், சிவராமமங்கலம், அப்பன்திருப்பதி, குலசேகரநத்தம், சாமிஊத்து, ஆழ்வார்தோப்பு, கோவங்காடு தெற்கு, தெற்கு, கோட்டைக்காடு.
- சிவராசு, இயக்குநர், நகராட்சி நிர்வாகம், சென்னை- திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் வட்டம்.
- பிரகாஷ், கூடுதல் ஆணையர், வருவாய் நிர்வாகம், சென்னை- வாழவல்லான், ஆழ்வார்திருநகரி, அழகியமணவாளபுரம், செம்பூர், புன்னக்காயல், சூழவாய்க்கால், மேலஆத்தூர், திருப்புளியங்குடி, சின்னநட்டாத்தி.
இவர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு அருகில் உள்ள பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் உருவாக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்து, சமுதாய சமையல் அறைகள் அமைத்து இதர பகுதிகளில் இருந்து வரப்பெறும் உணவு பொட்டலங்கள் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்தல், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்தல், சுகாதார துறையின் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்துதல், இறந்த விலங்குகளின் உடல்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தல், துண்டிக்கப்பட்ட மின்சார வசதியை வழங்க நடவடிக்கை எடுத்தல், முழுவதுமாக துண்டிக்கப்பட்ட பகுதிகள் ஏதேனும் இருப்பின் அப்பகுதிகளுக்கு தொடர்பு ஏற்படுத்துதல், பாதிக்கப்பட்ட சாலைகளை புணரமைக்க நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள்." இவ்வாறு கூறப்பட்டுள்ளது.