Srivaikuntam: 'குடிநீர், உணவு இல்லை, பால் மட்டும் எதற்கு'.. அமைச்சர் எ.வ.வேலுவை முற்றுகையிட்ட மக்கள்!
Dec 20, 2023, 04:27 PM IST
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் அமைச்சர் எ.வ.வேலுவை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் டிசம்பர் 17, 18ம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. வரலாறு காணாத மழையால் இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 93.2 செ.மீட்டர் அளவுக்கு அதி கனமழை பெய்ததது. இதனால் காயல்பட்டினம் வெள்ள நீரால் சூழ்ந்து தனித்தீவாக காட்சி அளித்தது. அதேபோல் தூத்துக்குடியில் பெய்த பெருமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வந்தாலும் கடந்த மூன்று தினங்களாக தூத்துக்குடி நகரின் பல்வேறு பகுதிகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பல இடங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், கடந்த மூன்று நாட்களாக உணவு , தண்ணீர் ஏதும் கிடைக்காமல் அவதிப்படுவதாக தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கோரம்பள்ளம் பகுதி மக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இரண்டு நாட்களாக உணவு, தண்ணீர் ஏதும் கிடைக்காமல் இருப்பதால் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் யாரும் இன்னும் தங்களது பகுதிக்கு வரவில்லை எனவும் அவர்கள் குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். விரைவில் தங்களது பகுதிக்கு அரசு அதிகாரிகள் வந்து, உரிய உதவிகளைச் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, வெள்ள பாதிப்புகளை பார்வையிட ஸ்ரீவைகுண்டம் சென்ற அமைச்சர் எ.வ.வேலுவை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக உணவு, குடிநீர், மின்சாரம் என எதுவும் வழங்கவில்லை என்ற குற்றசாட்டையும் அவர்கள் முன்வைத்தனர். உணவு, தண்ணீர் இல்லாமல் தவிக்கும் தங்களுக்கு பால் மட்டும் எதற்கு எனவும் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதையடுத்து அவர்களை சமாதானம் செய்த அதிகாரிகள் அமைச்சரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பொன்னங்குறிச்சி பகுதியில் அமைச்சர் எ.வ.வேலு புகைப்படத்தை ஸ்டிக்கர் ஒட்டி கொடுப்பதற்காக லாரிகளில் கொண்டு சென்ற நிவாரணப் பொருட்களை பொதுமக்கள் மறித்து எடுத்து சென்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்