ஐடி பெண் ஊழியரின் உயிரை பறித்த சுவர்: மகள் சொன்னதை நினைத்து கதறி அழுத தந்தை!
Jan 29, 2023, 12:10 PM IST
Chennai Techie Dies: "வேலைக்கு போயிட்டு வரேன்-னு சொன்ன பொண்ணு.. ஆனா வீட்டுக்கு வரல..சென்னையில் பழைய கட்டடத்தை இடிக்கும் போது நிகழ்ந்த விபத்தில் மகளை பறிகொடுத்த தந்தை கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.
சென்னை அண்ணாசாலை ஆயிரம் விளக்கு சுரங்கப்பாதை அருகே பழைய பயன்படுத்தப்படாத கட்டிடம் இருந்து வந்தது. இதனால் அந்த கட்டிடத்தை ஜேசிபி இயந்திரம் கொண்டு இடிக்கும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது திடீரென கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து சாலை நடைப்பாதையில் சென்ற இளம்பெண் மீது விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்த மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் இடிபாடுகளில் சிக்கிய இளம் பெண்ணை சடலமாக மீட்டனர். இதையடுத்து உயிரிழந்த இளம் பெண் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த பத்மபிரியா (23) என்பது தெரியவந்தது. இந்த விபத்தில் திருச்சியை சேர்ந்த விக்னேஷ் படுகாயங்களுடன் உயிர்தப்பினார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், இது குறித்து ஆயிரம் விளக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மதுரை, உசிலம்பட்டியைச் சேர்ந்த பாண்டி முருகேசன் - பாண்யம்மாள் தம்பதியின் மகள் பத்மபிரியா சென்னை, பம்மல் சங்கர் நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. காலை வழக்கம் போல் மெட்ரோ ரயிலில் பணிக்கு வந்த பத்ம பிரியா ஆயிரம்விளக்கு ஸ்டேஷனில் இறங்கி அலுவலகத்திற்கு தன்னுடன் வேலை பார்த்து வரும் விக்னேஷுடன் நடந்து சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ஜேசிபி உரிமையாளர் ஞானசேகர், ஜேசிபி ஓட்டுனர் பாலாஜி ஆகியோரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள கட்டட உரிமையாளர்கள் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய பத்ம பிரயாவின் தந்தை பாண்டி முருகேசன், "எனது மகள் படிப்பை முடித்துவிட்டு ஒரு மாதத்துக்கு முன்பு தான் பணியில் சேர்ந்தார். கடைசியாக பொங்கலுக்கு ஊருக்கு வந்த பிரியா சமீபத்தில் தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்ததுடன் ஒழுங்காக சாப்பிடுங்கள் அப்பா என்று கூறியதே அவர் பேசிய கடைசி வார்த்தையாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. கட்டிட உரிமையாளர் இதுவரை கைது செய்யப்பட்டவில்லை. கட்டடத்தை இடிக்கும் போது அரசு அதிகாரிகள் ஆய்வு செய்திருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது. எனவே எனது மகள் இழப்பிற்கு அரசு அதிகாரிகளே காரணம். மற்றவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம்" என கூறியிருந்தார்.
பின்னர் போலீசார் அவர்களை சமாதானம் செய்து சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் பெற்றோர், பத்ம பிரியாவின் உடலை வாங்கிச் சென்றனர்.
டாபிக்ஸ்