Mother: தாய்ப்பாலுக்கான மாற்று உணவுகளில் வேதிப்பொருட்களா? - ஆய்வில் அதிர்ச்சி
Feb 24, 2023, 01:37 PM IST
Milk Substitutes: குழந்தைகளுக்கு கொடுக்கும் தாய்ப்பாலுக்கு மாற்று உணவுப்பொருட்களில் வேதிப்பொருட்கள் கலக்கப்பட்டுள்ளதாக ஆய்வுக்கட்டுரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வுக்கட்டுரையின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தாய்ப்பாலே மிகச்சிறந்த நோய்தடுப்பு மருந்து என்பதை உலக சுகாதார நிறுவனமே வலியுறுத்தி வருகிறது. பிறக்கும் குழந்தைகளுக்கு முதல் 6 மாதம் தாய்ப்பால் மட்டுமே போதுமானது. ஆனால் உலக அளவில் 50 சதவீத குழந்தைகளுக்கு மட்டுமே 6 மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. எஞ்சிய 50 சதவீத குழந்தைகளுக்கு பல்வேறு காரணங்களால் தாய்ப்பால் மாற்று செயற்கை பொருட்களே கொடுக்கப்படுகிறது.
சமீபத்தில் ஆய்வாளர் டேனியல் இந்தியா உட்பட 15 நாடுகளில் உள்ள 608 தாய்ப்பால் மாற்று செயற்கை பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களை ஆய்வு செய்து, தாய்ப்பாலுக்கு மாற்றாக கொடுக்கப்படும் பால் பவுடர்கள் உள்ளிட்ட பொருட்களில் முற்றிலும் அறிவியலுக்கு முரணாக, செயற்கை பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார். இதனால், குழந்தைகளுக்கு பொதுவான வளர்ச்சி, மூளைத்திறன் மேம்பாடு, நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிப்பு ஆகியவை அவை மூலம் பெற முடியும் எனும் தவறான பிரச்சாரத்தை செய்து வருவதாகவும், குற்றம் சாட்டியுள்ளார்.
செயற்கை தாய்ப்பால் மாற்று பொருட்களில் குழந்தை வளர்ச்சிக்குத் தேவையான சரிவிகித சத்துக்களின் கலவை இல்லை. செயற்கை தாய்ப்பால் மாற்று உற்பத்தி நிறுவனங்களின் ஆண்டு வணிகம் 55 பில்லியன் டாலர் என்பதால், அவை அறிவியலை ஓரங்கட்டி தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்காமல், செயற்கை தாய்ப்பால் மாற்றுப் பொருட்களை சந்தைப்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உண்மையிலேயே தாய்ப்பால் கொடுக்க முடியாத மருத்துவ காரணங்களுக்கு மட்டும் வேறு வழியின்றி, செயற்கை தாய்ப்பால் கொடுக்கலாம்.
பிரிட்டீஸ் மெடிக்கல் ஜெர்னலில் டேனியல் முன்பிலிட் தெரிவித்துள்ளதாவது -
50 சதவீதம் ஆய்வுகளில் தாய்ப்பால் மாற்று பொருட்களில் உள்ள எந்த வேதிப்பொருள் மூலம் குறிப்பிட்ட பலன் கிடைக்கிறது என்ற செய்தி இல்லை.
4ல் 3 ஆய்வுகளில் பலன்கள் கிடைப்பதற்கான அறிவியல் ஆதாரங்கள் சுட்டிக்காட்டப்படாமல் உள்ளது.
50 சதவீதம் ஆய்வுகள் விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களாகவும், விலங்குகளில் மட்டுமே பரிசோதிக்கப்பட்டு முடிவுகள் எட்டப்பட்டுள்ளன என்ற தகவலும் உள்ளது.
14 சதவீத ஆய்வுகள் மட்டுமே முறையான அனுமதி பெற்று மனிதர்களிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
90 சதவீத ஆய்வுகளின் முடிவுகள் ஒருதலைப்பட்சமாகவும், சரியான புள்ளி விவரங்கள் இல்லாமலும் அல்லது சொல்லும் கருத்திற்கு வலுசேர்க்கும் அறிவியல் ஆதாரங்கள் இல்லாமலும் உள்ளது.
90 சதவீத ஆய்வுகளுக்கான நிதி, செயற்கை தாய்ப்பால் மாற்று பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டோ அல்லது ஆய்வாளர்கள் அந்த நிறுவனத் தொடர்பில் உள்ளவர்களாகவோ இருப்பதும் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் 2020 புள்ளிவிபரப்படி, 54.7 சதவீத தாய்மார்கள் பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுத்ததாகவும், 6 மாத காலத்திற்கு தாய்ப்பால் கொடுத்தவர்கள் 48.3 சதவீதம். இது முந்தைய ஆய்வுகளைவிட அதிகம். ஆய்வுக்கட்டுரைகள் ஆராய்ந்து எழுதியவர் மருத்துவர் புகழேந்தி.
டாபிக்ஸ்