பழ.நெடுமாறனின் கருத்தை ஏற்று ஏமாற வேண்டாம் - பகீர் கிளப்பும் மணியரசன்!
Feb 16, 2023, 12:28 PM IST
Prabhakaran: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் கூறியிருப்பதை ஏற்று ஏமாற வேண்டியதில்லை. அந்த அறிவிப்பு, நம்பத் தகுந்ததாகவும் இல்லை என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் கூறுகையில், சர்வதேசச் சூழலும், இலங்கையில் ராஜபட்ச ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்துக் கிளம்பியிருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும், தமிழீழத் தேசியத் தலைவர் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
இந்தச் சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழக அரசும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும், தமிழக மக்களும் ஒன்றுபட்டு நின்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்குத் துணை நிற்குமாறு வேண்டிக்கொள்கிறோம் என்று தெரிவித்திருந்தார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்து அரசியல் விவாதங்களை கிளப்பிய நிலையில், தக்க சான்றுகள் இல்லாமல், பிரபாகரன் வரப் போகிறார் என நெடுமாறன் கூறுவதை, அப்படியே ஏற்று ஏமாற வேண்டியதில்லை என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக, கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்டோர் முன்னிலையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். கவிஞர் காசி ஆனந்தன், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆதரவைப் பெற்று, இலங்கைத் தமிழர்களின் அரசியல், இறையாண்மை மற்றும் உரிமைகளை மீட்கப் போவதாக அறிவித்து செயல்பட்டு வருபவர்.
இவரது நிலைப்பாட்டை தமிழகத்தில் உள்ள பல தமிழீழ ஆதரவு அமைப்புகள் ஆதரிக்கவில்லை. மேலும், பழ.நெடுமாறனின் அறிக்கையில், இலங்கையில் சீனா காலூன்றுவதையும், சீனாவால் இலங்கை வழியாக இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படுவதையும் தடுக்க பிரதமர் மோடி துரித நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம், பாஜகவை ஆதரித்து இலங்கைத் தமிழர்கள் உரிமைகளை மீட்கலாம் என்ற திட்டத்தை வலியுறுத்துகிறார் எனத் தெரிகிறது. தக்க சான்றுகள் இல்லாமல், பிரபாகரன் வரப் போகிறார் என அவர் கூறுவதை, அப்படியே ஏற்று ஏமாற வேண்டியதில்லை. அந்த அறிவிப்பு, நம்பத் தகுந்ததாகவும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
டாபிக்ஸ்