Fake Doctor Arrest: எஸ்எஸ்எல்சி படித்து எம்பிபிஎஸ் வேலை…போலி மருத்துவர் கைது
Feb 24, 2023, 01:36 PM IST
எஸ்எஸ்எல்சி படித்துவிட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவராக செயல்பட்டு வந்த போலி டாக்டர் தருமபுரி அருகே கைது போலீசாரால் செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரியில் நாயக்கன் கொட்டாய் பகுதியில் போலி மருத்துவர் ஒருவர் அந்த பகுதியை சேர்ந்த நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதாக மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்துக்கு புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்து போலி மருத்துவ ஒழிப்பு குழுவினர்கள், கிருஷ்ணாபுரம் காவல்நிலையில் இதுதொடர்பாக தகவல் தெரிவித்தனர். பின்னர் காவல்துறையினருடன் நாயக்கன் கொட்டாய் பகுதிக்கு அவர்கள் சென்றனர்.
அங்கு கிளினிக் நடத்தி வந்த கண்ணன் (60) என்பவரிடம் மருத்துவ பணி செய்வதற்கான உரிமை மற்றும் ஆவணங்கள் குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து, அந்தப் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்துள்ளது தெரியவந்தது.
இவரது தந்தை ஹோமியோ மருத்துவராக இருந்து வந்த நிலையில், அவரிடமிருந்து கண்ணன் மருத்துவம் கற்றுக்கொண்டுள்ளார். தனது தந்தை இறப்புக்கு பின்னர், கிளினிக் அமைத்து மருத்துவராக செயல்பட்டுள்ளார். கிளினிக்குக்கு மருத்துவம் பார்க்க வரும் நோயாளிகளுக்கு ஊசி போட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கி வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக இவர் மருத்துவராக இருந்து வந்தது விசாரணையில் கண்டறிப்பட்டது.
இதைத்தொடர்ந்து கிருஷ்ணாபுரம் போலீசார் மருத்துவராக இருந்து வந்த கண்ணனை கைது செய்து, அவரிடமிருந்த மருந்து மாத்திரைகளை கைப்பற்றினர்.
பத்தாம் வகுப்பு வரை படித்த இவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் இவர் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். எஸ்எஸ்எல்சி வரை மட்டுமே படித்துவிட்டு, எம்பிபிஎஸ் மருத்துவராக செயல்பட்டு பிரபலமானவராக இருந்து வந்த நபர் போலி மருத்துவர் என தெரியவந்தது கிருஷ்ணாபுரம் பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.