Mari Selvaraj: ’உதயநிதி உடனான புகைப்படம்’ விமர்சகர்களுக்கு மாரி செல்வராஜ் பதிலடி!
Dec 20, 2023, 09:56 AM IST
”வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் இயக்குநர் மாரி செல்வராஜ் இருக்கும் புகைப்படங்கள் வலைத்தளங்களில் பேசு பொருள் ஆனது”
மழை வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் இயக்குநர் மாரிசெல்வராஜ் இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், அதற்கு மாரி செல்வராஜ் பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வரலாறு காணாத மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெள்ள மீட்பு பணிகளுக்காக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன் தினம் மாலை வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு விரைந்தார். அங்குள்ள மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான பணிகளை செய்து வந்தார்.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம், முத்தலாங்குறிச்சி பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் அங்கிருந்து வெளியே வரமுடியாமல் தத்தளித்த 100க்கும் மேற்பட்ட மக்களை படகுகள் உதவியுடன் மீட்டு வந்தார் மாரி செல்வராஜ். இது தொடர்பாக மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “கருங்குளம் பஸ் ஸ்டாப்பில் சிக்கியிருந்த 60 க்கும் மேற்பட்டோர் மீட்கபட்டுள்ளனர் . முத்தலாங்குறிச்சி மக்களும் மீட்கபட்டுள்ளனர் .வெள்ளத்தின் வேகம் குறையாமல் இருப்பதால் அடுத்த கிராமங்களுக்குள் நுழைவது கடினமாக இருக்கிறது.. நன்றாக விடியும்வரை மக்கள் தைரியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கவும்.. மீள்வோம் “ எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் இயக்குநர் மாரி செல்வராஜ் இருக்கும் புகைப்படங்கள் வலைத்தளங்களில் பேசு பொருள் ஆனது. அதிமுக மற்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் மாரி செல்வராஜையும், உதயநிதி ஸ்டாலினையும் விமர்சித்து பதிவுகளை இட்டு வந்தனர்.
இந்த நிலையில் தனது கிராமத்தில் வெள்ளம் சூழந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, தனது முகநூல் பக்கத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் கருத்துப்பதிவிட்டுள்ளார்.
அதில், “என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல …நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது” என கூறி உள்ளார்.