Vinayagar Chaturthi: பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் சிலைக்கு தடை! உயர்நீதிமன்ற கிளை அதிரடி!
Sep 17, 2023, 04:33 PM IST
“ரசாயனம் கலந்த சிலைகளை நீர்நிலைகளில் கலப்பதால் புற்றுநோய் ஏற்படுவதாகவும், விஷம் என்பது ஒருதுளி விஷம் அதிகவிஷம் என்பதில்லை என நீதிபதிகள் கருத்து”
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தனது குடிசைகளில் தயாரித்துள்ள விநாயகர் சிலைகளை விற்பனை செய்யவிடமால் காவல்துறையினர் தடுப்பதாகவும், விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அனுமதி அளித்து உத்தரவிடக் கோரியும் மதுரை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி ஜி.சுவாமிநாதன், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலப்பொருட்களில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனைக்கு தடை விதிக்க முடியாது. அதே வேளையில் இந்த சிலைகளை ஆற்றில் கரைக்க அனுமதிக்க முடியாது என்று கூறி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
தனி நீதிபதி ஜி.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக திருநெல்வேலி ஆட்சியர் மேல்முறையீடு செய்தார். தனிநீதிபதியின் இந்த உத்தரவு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு மாறாக உள்ளது என்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு அனுமதி இல்லை என தெளிவாக கூறி உள்ளது.
மேலும் சிலை தயாரிப்பு நிறுவனம் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும் ஆனால் அது போன்ற அனுமதிகளை சிலை தயாரிப்பு நிறுவனம் பெறவில்லை என்றும் கூறி இருந்தார்.
அரசு வாதத்தை கேட்ட நீதிபதி, தனிநீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன் ஏற்கெனவே பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில்தான் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை வகுத்துள்ளது. அதை ஏன் பின்பற்றவில்லை என்று கேள்வி எழுப்பியதுடன் ரசாயனம் கலந்த சிலைகளை நீர்நிலைகளில் கலப்பதால் புற்றுநோய் ஏற்படுவதாகவும், விஷம் என்பது ஒரு துளி விஷம் அதிக விஷம் என்பதில்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
டாபிக்ஸ்