TTV Dinakaran: ’நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி?’ பிரேமலதாவை சந்தித்த பின் டிடிவி பேட்டி!
Dec 31, 2023, 09:28 PM IST
“TTV Dinakaran: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்பு உடைய அதிகாரிகளுக்கு தண்டனை வாங்கி தர வேண்டுமே தவிர பதவி உயர்வு அளித்து இருப்பது உண்மையாகவே கண்டிக்கத்தக்கது”
மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி விட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேமுதிகவின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாத சூழலில் இருந்தேன். இன்று பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினரை சந்தித்து, விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தி உள்ளேன். விஜயகாந்த் அவர்களுக்கு பொது இடத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக அரசாங்கம் அந்த கோரிக்கையை ஏற்று அரசு மணிமண்டபம் அமைத்து தர வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் முதலமைச்சரை சந்தித்துள்ளது குறித்த கேள்விக்கு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன்படி உள் ஒதுக்கீட்டை தமிழக அரசு செய்ய வேண்டும் என கூறினார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர் உடைய அதிகாரிக்கு பதவி உயர்வு கொடுத்துள்ளது குறித்த கேள்விக்கு, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய அதிகாரிக்கு பதவி உயர்வு கொடுத்து இருப்பது தவறான முன்னுதாரனம் ஆகிவிடும். குருவியை சுடுவதை போல் 14 பேரை சுட்டு உள்ளனர். அதற்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதில் தொடர்பு உடையவர்களுக்கு தண்டனை வாங்கி தர வேண்டுமே தவிர பதவி உயர்வு அளித்து இருப்பது உண்மையாகவே கண்டிக்கத்தக்கது என கூறினார்.
கூட்டணி தொடர்பாக அமமுகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்த கேள்விக்கு, கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். முழுமையான பிறகு உங்களிடம் சொல்வதுதான் சரியானதாக இருக்கும். தேசியக் கட்சிகள் உடனும் போட்டியிடலாம், தனித்தும் நிற்கலாம் என்றார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்படுவீர்களா? என்ற கேள்விக்கு, நாங்கள் இருவரும் இணைந்து அரசியலில் பயணிப்போம் என முடிவு செய்துள்ளோம். பொறுத்து இருந்து பாருங்கள்.