அக்னிபாத் ஆள்சேர்ப்பில் ராணுவம் செய்துள்ள மாற்றம் தெரியுமா?
Feb 05, 2023, 12:51 PM IST
அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவதிற்கு ஆள் சேர்க்கும் பணிக்கு இனி முதலில் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
அக்னிவீரர் பணியிடங்களுக்கு இனிமேல் முதலில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என ராணுவம் அறிவித்துள்ளது. அக்னிவீரர்கள் ‘அக்னிபாத்' திட்டத்தின் கீழ் ராணுவம் உள்ளிட்ட முப்படைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இவர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போருக்கு முதலில் உடல் தகுதித்தேர்வு, பின்னர் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வந்தது. இந்த இரண்டையும் முடித்தபிறகே எழுத்து தேர்வு எனப்படும் பொது நுழைவுத்தேர்வு நடத் ப்பட்டு வருகிறது. ஆனால் இந்த முறைக்கு இனிமேல் முதலில் எழுத்து தேர்வு நடத்த ராணுவம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பல்வேறு செய்தித்தாள்களில் ராணுவம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் தெரிவித்த தகவல்கள்
அக்னிவீரர் ஆட்சேர்ப்பு நடைமுறையில் இதுவரை, விண்ணப்பதாரர்களின் உடல் தகுதித்தேர்வு முதலில் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் இனிமேல் பொதுவான ஆன்லைன் பொது நுழைவுத்தேர்வு முதலில் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுகிறவர்களுக்கு பின்னர் உடல் தகுதித்தேர்வும், மருத்துவ பரிசோதனைகளும் நடக்கும். இது தேர்வு நடைமுறைகளை மேலும் வீரர்களின் அறிவாற்றல் அம்சத்தில் அதிக கவனம் செலுத்துவதை உறுதி செய்யும். மேலும் ஆட்சேர்ப்பு முகாம்களில் காணப்படும் அதிக கூட்டத்தைக் குறைத்து, எளிதாக்க கையாளக் கூடியதாகவும் இருக்கும். இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த முறையில் வரும் ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் 200 இடங்களில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
டாபிக்ஸ்