Gongura Pachadi : வாயில் எச்சில் ஊறவைக்கும் சுவையில் புளிச்ச கீரை பச்சடி செய்வது எப்படி? இதோ ரெசிபி!
May 05, 2024, 03:07 PM IST
Gogura Pachadi : புளிச்ச கீரை பெயருக்கு ஏற்ப கொஞ்சம் புளிப்பு சுவை நிறைந்ததாக இருக்கும். அதில் பச்சடி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
புளிச்ச கீரை பச்சடி பிரட்டிய ஒரு உருண்டை சாதத்தில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. குறிப்பாக இரும்புச்சத்து அதிகம் நிறைந்தது. மேலும் ரத்தசோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள பலன் நிச்சயம். பசியில்லாதவர் இதை சாப்பிட்டால் பசி வரும்.
தேவையான பொருட்கள்
புளிச்ச கீரை – ஒரு கட்டு
நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
புளிக்கரைசல் – எலுமிச்சை அளவு எடுத்து கரைத்து எடுக்கவேண்டும்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்
வெந்தயம் – அரை ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
வரமல்லி – 3 ஸ்பூன்
வரமிளகாய் – 10
பெருங்காயம் – ஒரு சிறிய துண்டு
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
வரமிளகாய் – 2
பூண்டு – 10 பல் உறித்தது
செய்முறை
கடாயில் வெந்தயம், கடுகு, சீரகம், வரமல்லி, வரமிளகாய் என அனைத்தும் சேர்த்து நன்றாக வாசம் வரும்வரை வறுத்துக்கொள்ள வேண்டும். கடைசியாக சிறிது எண்ணெய் சேர்த்து பிரட்டி, எடுத்து ஆறவிடவேண்டும்.
பின்னர் சிறிது எண்ணெய் சேர்த்து கட்டி பெருங்காயத்தை நன்றாக பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதையும் அரைக்கும் பொருட்களுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆறியபின் அனைத்தை பொருட்களையும் காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக்கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து ஆய்ந்து, கழுவி சுத்தம் செய்த புளிச்ச கீரையை மட்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும். கீரை நன்றாக நிறம் மாறி வதங்கி வரும்.
அப்போது புளிக்கரைசலை சேர்க்கவேண்டும். பின்னர் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவேண்டும். இதற்கு கூடுதலாக தண்ணீர் சேர்க்கக்கூடாது. புளிக்கரைசலே போதுமானது.
இவையனைத்தும் ஒன்றுசேர்ந்து வெந்து வரும்போது, இதில் அரைத்து வைத்துள்ள மசாலாப்பொடியை சேர்க்கவேண்டும்.
அடுப்பை குறைவான தீயில் வைத்து, நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன் சேர்த்து, நன்றாக வதக்கவேண்டும்.
நல்ல சுருண்டு வரும்போது அடுப்பை அனைத்துவிடவேண்டும்.
தனியாக தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், கடுகு, உளுந்து, சீரகம் சேர்த்து பொரியவிடவேண்டும். பின்னர் கறிவேப்பிலை, உடைத்த வர மிளகாய், பூண்டு சேர்த்து நன்றாக வதங்கியவுடன் இதை புளிச்சக்கீரை பச்சடியில் சேர்க்க வேண்டும்.
இதை நன்றாக கலந்துவிட்டால், சூப்பர் சுவையில் புளிச்ச கீரை பச்சடி சாப்பிட தயாராக உள்ளது.
இதை சூடான சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவைஅள்ளும்.
புளிச்சக்கீரையின் நன்மைகள்
புளிச்சக்கீரை உடலுக்கு பல்வேறு நன்மைகளையும் கொடுக்கிறது. அதன் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
புளிச்சக்கீரை கல்லீரலை காக்கிறது. ரத்தத்தின் அளவு மற்றும் தரம் இரண்டையும் அதிகரிக்கிறது.
உயர் ரத்த அழுத்தத்தை தடுக்கிறது.
தலைமுடி ஆரோக்கியம் மற்றும் அடர்த்தியை அதிகரிக்கிறது.
பாலூட்டும் தாய்மார்களுக்கு பாலை அதிகரிக்க உதவுகிறது.
புற்றுநோய், வீக்கம், இரும்புச்சத்துக் குறைபாடு ஆகியவற்றை தடுக்கிறது.
செரிமானத்தை அதிகரிக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
எலும்பை வலுவாக்குகிறது.
ரத்த ஓட்டத்தை அதிகரித்து, நல்ல உறக்கத்துக்கு வழிவகுக்கிறது.
கண்களுக்கு நல்லது.
நீரிழிவை மேலாண்மை செய்ய உதவுகிறது.
சிறுநீர் பாதை தொற்றுக்களை போக்குகிறது.
சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
டாபிக்ஸ்