September 30 Tamil News Updates: பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
Sep 30, 2022, 04:10 PM IST
ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும் அக்டோபர் 1 முதல் 5 வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
விடுமுறை அறிவிப்பு
ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த விடுமுறை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 மாவட்டங்களுக்கு கனமழை
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த தடை
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நில அபகரிப்பு வழக்கு
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமாரின் சகோதரர் மகேஷ் என்பவர் தனது நிலத்தை அபகரித்து விட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மகள் ஜெயபிரியா மற்றும் அவரது மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரித்த நீதிபதி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது மகள் ஜெயபிரியா, மருமகன் நவீன் குமார் மீது பதியபட்ட வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.
ரெப்போ வட்டி விகிதம் உயர்வு
வங்கிளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். ரெப்போ வட்டி விகிதம் 5.4 சதவீதத்தில் இருந்து 5.9 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
நாளை முதல் நடைமேடை கட்டணம் உயர்வு
பண்டிகை காலத்தை முன்னிட்டு சென்னை கோட்டத்தில் ரயில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.20-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31 வரை இந்த கட்டண உயர்வு அமலில் இருக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பும்ரா விலகல்
இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா காயம் காரணமாக, எதிா்வரும் டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து விலகியிருக்கிறாா்.
ராகுல் காந்தி குற்றச்சாட்டு
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இந்தியா ஒற்றுமை நடைப்பயணம் தமிழ்நாட்டில் நிறைவு பெரும் வகையில் கூடலூர் அரசு கலைக் கல்லூரியில் இருந்து கூடலூர் பேருந்து நிலையம் வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் நடைபயணத்தை மேற்கொண்ட ராகுல் காந்தி மேற்கொண்டார். பின்னர் கூடலூரில் ஒற்றுமை நடைப்பயணத்தை முடித்துக் கொண்ட ராகுல்காந்தி அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு மக்களிடையே பிரிவினையை உண்டாக்குவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
மேலும் 3 ஆண்டுகள் சிறை
மியான்மா் ஜனநாயகக் கட்சித் தலைவா் ஆங் சான் சூகிக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி என அடுத்தடுத்து அரசு விடுமுறை வருவதன் காரணமாகவும் வார இறுதி விடுமுறை காரணமாகவும் சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்ல இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வழக்கமாக இயக்கப்படும் 2100 பேருந்துகளோடு கூடுதலாக 2050 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிற ஊர்களில் இருந்தும் 1,650 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அம்பானிக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பை வழங்கியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளியானது பொன்னியின் செல்வன்
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘பொன்னியின் செல்வன் பாகம்-1’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது
மியான்மரில் நிலநடுக்கம்
மியான்மரில் இன்று காலை 3:52 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவில் பதிவானது. பர்மாவின் வடமேற்கே 162 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.