September 23 Tamil News Updates: உயர் கல்வியில் சேராத 8588 மாணவர்கள்!
Sep 23, 2022, 03:49 PM IST
12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு உயர் கல்வியில் சேராத 8588 மாணவர்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு முடித்த 79,792 மாணவர்கள் உயர்கல்வி சேர்ந்துள்ளார்களாக என்று பள்ளிக் கல்வித் துறை மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 8588 மாணவர்கள் எந்தவித உயர் கல்வியிலும் சேரவில்லை என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில் இவர்களை தனித்தனியாக தொடர்புகொண்டு ஆலோசனை வழங்க பள்ளிக்கல்வித் துறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தலைமை காவலர் சஸ்பெண்ட்
கன்னியாகுமரியில் செம்மண் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்த அஞ்சுகிராமம் தலைமை காவலர் லிங்கேஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தலைமை காவலர் விக்னேஷை சஸ்பெண்ட் செய்து கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஹரிஹரன் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
2 வயது சிறுவன் மீது பேருந்து மோதி விபத்து
மதுரை, விலாங்குடி சத்யமூர்த்தி நகரில் வீட்டு வாசலில் விளையாடிய 2 வயது சிறுவன் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. தொழிலாளர்களை ஏற்றி வந்த மினி பேருந்து மோதியதில் செந்தில் குமார் என்பவர் மகன் பொன்ராம் உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2வது நாளாக வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 30 காசுகள் குறைந்து 81.18ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்வால் 2வது நாளாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அதிகபட்ச வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
சில்க் நினைவு தினம்
ஈரோட்டில் நடிகை சில்க் ஸ்மிதாவின் 27வது நினைவு தினத்தையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினா்.
அசோக் கெலாட் போட்டி
ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் பதவி தேர்லில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளாா்.
இணையவழி சேவை
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 'எங்கிருந்தும் எந்நேரத்திலும்’ என்ற இணையவழி சேவையின் மூலமாக பொதுமக்கள் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி மற்றும் நகர்ப்புற புல வரைபடங்களை இணையவழியில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஆகியவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
2ஆவது டி20 கிரிக்கெட்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் வென்று முன்னிலையில் இருக்கிறது. இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை தக்க வைக்க இயலும். இந்த ஆட்டம் இன்றிரவு 7 மணிக்கு நாகபுரி விசிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது.
பட்டாசு எடுத்து செல்ல தடை
ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் பயனர்கள் அவதி
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இன்ஸ்டாகிராம் செயலி சுமார் ஒரு மணி நேரம் முடங்கியது. இதனால் பயனர்கள் அவதிக்குள்ளாகினர்.
அமைதி காக்க வலியுறுத்தல்
நாடு முழுவதும் பிஎஃப்ஐ அலுவலகங்களில் என்ஐஏ நடத்திய சோதனை நடத்தி உள்ள நிலையில், முஸ்லிம் இளைஞா்கள் அமைதிகாக்க வேண்டும் என்று பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.
முன்பதிவு தொடங்கியது
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 24ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கு முந்தைய இரண்டு நாட்களும் சனி, ஞாயிறு ஆகிய வார இறுதிநாட்கள் விடுமுறையாக அமைந்துள்ளது. தீபாவளிக்கு முதல் நாள் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோர் இன்று அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கு தடுப்பூசி
தமிழகத்தில் அக்டோபர் 4ம் தேதி 14 முதல் 17 வயது வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.