Mayilsamy Wish : நிறைவேறாமல் போன மயில்சாமி ஆசை
Feb 19, 2023, 01:42 PM IST
நடிகர் மயில்சாமியின் கடைசி ஆசை நிறைவேறாமல் போனது வருத்தமாக இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து உள்ளனர்.
நகைச்சுவை நடிகர் மயில்சாமி நேற்று இரவு சிவராத்திரி பூஜையில் கலந்துகொண்டு விட்டு வீடு திரும்பிய போது இன்று ( பிப்ரவரி 19 ) அதிகாலை காலமானார்.
மயில்சாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிதோசனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
நடிகர் மயில்சாமி மாரடைப்பால் மரணமடைந்தது அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி தமிழ் திரையுலகினரையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு ஏராளமான சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நேற்று சிவராத்திரி பூஜையின் போது டிரம்ஸ் சிவமணி அருகே அமர்ந்திருந்த மயில்சாமி அவரது ஆசையை கூறி உள்ளார். ஆனால் அது தான் அவரின் கடைசி ஆசை என்பது அவருக்கே தெரியாமல் இருந்து உள்ளது.
அவர் கூறியதாவது, “இந்த மேகநாதீஸ்வரர் கோயிலுக்கு விவேக்கை கூட்டிட்டு வந்திருக்கேன். இப்போ உங்களையும் கூட்டிட்டு வந்துட்டேன். எப்படியாவது ரஜினிகாந்தையும் அழைத்து வந்து, அவர் கையால் இங்கு இருக்கும் சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்ய வைக்க வேண்டும்” என்றார். இந்த தகவலை டிரம்ஸ் சிவமணி வெளியிட்டுள்ளார்.
மயில்சாமியின் இந்த ஆசை கடைசி வரை நிறைவேறாமலே போய் உள்ளது. மயில்சாமி மறைந்தாலும் அவருக்காக ரஜினிகாந்த் இந்த கோயிலுக்கு வந்து அவரது ஆசையை நிறைவேற்றினால் மயில்சாமியின் ஆத்மா சாந்தி அடையும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்