27 years Of Love Today: இளைஞருக்கு வரும் விடாப்பிடியான ஒரு தலைக்காதல்.. இறுதியில் என்ன ஆகிறது என்பதே லவ் டுடே!
May 09, 2024, 07:25 AM IST
27 years of Love Today: லவ் டுடே திரைப்படம் வெளியாகி 27 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இதில் இளைஞருக்கு வரும் விடாப்பிடியான ஒரு தலைக்காதல் பற்றி படம் பேசுகிறது.
27 years of Love Today: சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலசேகரன் இயக்கிய படம் தான், லவ் டுடே. இப்படத்தில் நடிகர் விஜய் மற்றும் சுவலட்சுமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் மந்த்ரா, ரகுவரன், கரண், ஸ்ரீமன் ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து இருந்தனர். இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஷிவா இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இப்படம் நடிகர் விஜய்யின் கரியரில் மிக முக்கிய திருப்புமுனைப் படமாக இருந்தது. இது திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடி, சூப்பர் ஹிட்டானது. மேலும் தெலுங்கு, கன்னடா, இந்தி மொழிகளிலும் ரீமேக் ஆனது.
இப்படத்தில் கணேஷ் என்னும் இளைஞர் சந்தியா என்னும் இளம்பெண்ணை விடாப்பிடியான ஒரு தலைப்பட்சமாக காதலிக்கிறான். ஆனால் அப்பெண்ணுக்கு அவன் மீது ஆர்வம் இல்லை. அவரது இடைவிடாத வெறித்தனமான காதல் நிறைய சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. இருப்பினும், ஒரு விபத்தில் தந்தையை இழக்கும் கணேஷுக்கு, வாழ்வு என்னவாகிறது என்பதே படத்தின் இருவரிக் கதை!
லவ் டுடே படத்தின் கதை என்ன?
கதையின் நாயகன் கணேஷ். கல்லூரி முடித்த இளைஞரான கணேஷ், தனது மருத்துவர் ஆன தந்தை சந்திரசேகருடன் வாழ்ந்து வருகிறார். கணேஷூக்கு பீட்டர், ரவி, சிவா ஆகியோர் நண்பர்களாக உள்ளனர். கண்டிப்பான போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகள் சந்தியா. இவர் மருத்துவம் பயின்று வருகிறார். மேலும், பயின்று தங்கப்பதக்கம் பெறவேண்டும் என்பதை இலக்காக வைத்து படித்து வருகிறாள். ஒரு நாள் சந்தியாவை பார்க்கும் கணேஷ், பார்த்தவுடன் ஒரு தலையாக காதலிக்கத் தொடங்குகிறான். இதற்காக சந்தியா வரும் பேருந்து நிறுத்தத்திற்கு தினமும் வருகின்றான், கணேஷ். சொல்லப்போனால், நிறைய அவளை ஃபாலோ செய்கின்றான்.
இதையெல்லாம் உணர்ந்த, சந்தியா, ஒரு நாள் கணேஷிடம் இப்படி வீணாக தன் பின் சுற்றி நேரத்தை வீணாக்கவேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்.
தூது செல்லும் தோழி:
அதன்பின் கணேஷ், சந்தியாவின் தோழி ப்ரீத்தியை தன் காதலில் உதவுமாறு கேட்டுக்கொள்கிறாள். ப்ரீத்தியும் சந்தியாவிடம் கணேஷின் விடாப்பிடியான காதலை சொல்லிப் புரிய வைக்க முயற்சிக்கின்றாள். ஆனால், எதற்கும் சந்தியா அசைந்து கொடுக்கமுடியவில்லை.
இதனை அறிந்து சந்தேகப்படும் சந்தியாவின் தந்தை இன்ஸ்பெக்டர் வாசுதேவன், கணேஷை அடித்து விடுகிறார். மேலும் சந்தியாவையும் கடுமையாகத் திட்டிவிடுகிறார். பின், சந்தியாவை அந்நகரை விட்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றிவிட்டார், சந்தியாவின் தந்தை வாசுதேவன்.
இதனால் மனமுடைந்து போகும் கணேஷ், அவளை கண்டுபிடிக்க வேண்டி பல்வேறு ஊர்களுக்குச் செல்கிறான். இறுதியில் ஒரு டிவிஸ்ட்டாக, கணேஷின் தந்தை சந்திரசேகர் ஒரு விபத்தில் இறந்து விடுகிறார். ஆனால், இத்தகவலை, கணேஷிடம் கொண்டு சேர்க்கமுடியாமல், அவர்களது நண்பர்கள் தவிக்கின்றனர். இறுதியில் வெளியூர் செல்லும் பேருந்தின் பின் பக்கம், சந்திரசேகர் இறந்ததை சுவரொட்டி அறிவிப்பாக வெளியிடுகின்றனர். இதை ஒரு இடத்தில் பார்க்கும் கணேஷ் வீட்டுக்கு வருவதற்குள் எல்லா இறுதிச்சடங்குகளும் முடிந்துவிட்டன. கணேஷின் நண்பர் பீட்டர், எல்லா இறுதிச்சடங்குகளையும் சந்திரசேகருக்கு செய்துள்ளார்.
இறுதியாக சந்தியா தன் காதலை கணேஷிடம் வெளிப்படுத்துகிறாள். ஆனால், கணேஷ் தனக்கு இந்த காதலால் எதுவும் கிடைக்கவில்லை என்றும்; தன் தந்தையின் இறுதிச் சடங்கில் கூட பங்கெடுக்கமுடியவில்லை என்றும் கூறி, அவளது காதலை ஏற்க மறுக்கிறார். மேலும் க்ளைமேக்ஸில் தான் காத்திருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கு விரைவாக சென்று கணேஷின் வருகைக்காக காத்திருக்கிறார், சந்தியா. ஆனால், அவர் அதைக் கண்டுகொள்ளாமல், தன் தந்தை சாவதற்கு முன் கொடுத்த பரிந்துரை கடிதத்துடன் இன்டர்வியூ செல்கிறார்.
படத்தில் நடித்தவர்களின் விவரம்: இப்படத்தில் கணேஷாக நடிகர் விஜய்யும், சந்தியாவாக நடிகை சுவலட்சுமியும் ப்ரீத்தியாக நடிகை மந்த்ராவும் நடித்து இருந்தனர். கணேஷின் நண்பர்களாக பீட்டராக கரணும், ரவியாக ஸ்ரீமனும், சிவாவாக தாமும் நடித்திருந்தனர். டாக்டர் சந்திரசேகராக ரகுவரனும், இன்ஸ்பெக்டர் வாசுதேவனாக ராஜன் பி. தேவ்வும் நடித்துள்ளனர்.
இப்படத்தில் ஏன் பெண்ணென்று பிறந்தாய், என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு, சலாமியா போன்ற இப்பாடல்கள் காலம் தாண்டி, இப்போதும் பலரால் கேட்கப்படுகின்றன. ரூ.3.2 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப் போடு போட்டு, 175 நாட்களைக் கடந்து ஓடியது.
படம் வெளியாகி 27ஆண்டுகள் ஆனாலும், லவ் டுடே விஜய் பலரது ஃபேவரைட் ஹீரோவாக இருக்கிறார். படமும் அப்படித்தான்!
டாபிக்ஸ்