Tenkasi : பட்டப் பகலிலே இப்படியா? காதல் மனைவி கடத்தல்-பெற்றோரை தேடும் தனிப்படை!
கணவன் கண்முன்னே காதல் மனைவி கடத்தப்பட்ட சம்பவம் தென்காசி வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி : இலஞ்சி அருகே உள்ள கொட்டாகுளம் என்னும் ஊரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் வினீத். இவர் சிறுவயதில் இருந்தே அதே பகுதியை சேர்ந்த மர அறுவை ஆலை அதிபர் நவீன் படேல் என்பவரின் மகள் கிருத்திகாவை காதலித்து வந்துள்ளார். தற்போது தனது எஞ்சினியரிங் படிப்பை முடித்த வினீத் சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த நிலையில் வினீத் வீட்டில் அவருக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த போது வினீத் கிருத்திகாவை காதலிக்கும் விஷயத்தை சொல்லி தன் வீட்டில் அவரின் காதலுக்கு ஒப்புதலும் வாங்கியுள்ளார். ஆனால் இவர்களின் காதலை கிருத்திகாவின் வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் வினீத் கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி தன் காதலி கிருத்திகாவை பதிவு திருமணம் செய்து கொண்டார்.
மேலும் பெண் வீட்டார் தரப்பில் இருந்து தங்களுக்கு ஏதாவது ஆபத்த்து நேரலாம் என்று தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று குற்றாலம் காவல்நிலையத்தில் இருவரும் பாதுகாப்பு கேட்டுள்ளார்கள்.
இதற்கிடையே கடந்த புதன்கிழமை தென்காசி குத்துக்கல்வலசை எனும் இடத்தில் தங்கள் உறவினர் வீட்டில் இருந்த வினீத் கிருத்திகா தம்பதியை கிருத்திகாவின் பெற்றோர் சில அடியாட்கள் கொண்ட கும்பலுடன் வந்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
அந்த கும்பல் வினீத்தின் கண் முன்னே அவரது மனைவி கிருத்திகாவை கடத்தி சென்றுள்ளனர். இது குறித்து வினித் குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் கிருத்திகா தன்னுடன் மட்டுமே இருக்க விரும்புவதாக அவர் எழுதிய கடிதத்தையும் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.
வினீத்தின் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றாலம் போலீசார், கிருத்திகாவின் தந்தை நவீன் படேல், தாயார் தர்மிஷா படேல், உறவினர்கள் விஷால், கீர்த்தி படேல், ராஜேஷ் படேல், ராசு, மைதினிக் ஆகிய ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தென்காசி வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கடத்தப்பட்ட இளம்பெண் குஜராத் மாநிலத்திற்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
அவர்களை பிடிப்பதற்காக விமான மூலம் ஒரு தனிப்படையினரும், ரயில் மூலம் ஒரு தனிப்படையினரும் குஜராத் மாநிலம் டோரனூர் பகுதிக்கு செல்வதாக காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளன. பட்ட பகலில் நடந்துள்ள இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்