விவசாயிகளுக்கு எதிரான திட்டத்தை ஏற்க முடியாது-விஜயகாந்த்
விவசாயிகள் மீது உண்மையில் பற்று இருப்பதாக சொல்லி கொள்ளும் மத்திய அரசு, தற்போது விவசாயிகளுக்கு எதிரான திட்டத்தை அறிவிந்திருப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு பல தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் “விவசாயிகள் மீது பற்று இருப்பதாக சொல்லிக் கொள்ளும் ஒன்றிய அரசு தற்போது விவசாயிகளுக்கு எதிரான திட்டத்தை அறிவித்திருப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என நடிகரும் தேமுதிக பொதுச்செயலாளருமான விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
ட்ரெண்டிங் செய்திகள்
காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் தமிழக விவசாயிகளின் தலையில் இடி விழுந்தது போல உள்ளது. நிலக்கரி கரங்கம் அமைக்கும் மத்திய அரசின் முடிவை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஏற்கனவே வறட்சி, மழை நீரில் மூழ்கி விளைநிலங்கள் சேதம் போன்ற இயற்கை சீற்றங்களால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதுபோன்ற சூழலில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதால் ஓட்டு மொத்த டெல்டா பகுதிகளும் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.
மேலும் நிலக்கரி எடுக்க விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் அகதிகளாக இடம் பெயரும் நிலை ஏற்படும். மேலும் விவசாயமும் கேள்விக்குறியாகிவிடும். விவசாயிகள் மீது உண்மையில் பற்று இருப்பதாக சொல்லி கொள்ளும் மத்திய அரசு, தற்போது விவசாயிகளுக்கு எதிரான திட்டத்தை அறிவிந்திருப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லையென்றால் விவசாய மக்களை ஒன்றுதிரட்டி வீதியில் இறங்கி போராடவும் தேமுதிக தயங்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்