Tenkasi Murder : கை, கால்களை கட்டிப்போட்டு முகத்தை சிதைத்து பெண் தொழிலாளி கொடூர கொலை – கணவனுக்கு வலை
Thenkasi Murder : தென்காசியில் பூட்டிய வீட்டில் கை, கால்களை கட்டிப்போட்டு பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவரை தேடி வருகிறார்கள்.
தென்காசி நடுமாதாங்கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி சித்ரா (50). சந்திரன் வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றிக்கொண்டு இருந்துள்ளார். அதனால் மனைவி சித்ரா பீடி சுற்றும் தொழில் செய்து குடும்பத்தை கவனித்து வந்தார். இந்நிலையில் இவர்களின் வீடு கடந்த 2 நாட்களாக பூட்டிக்கிடந்தது.
ட்ரெண்டிங் செய்திகள்
இதற்கிடையில், சித்ராவின் தம்பி குற்றாலநாதன் சந்திரனின் செல்போனுக்கு தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது அவர், சித்ராவுக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் உதவியாக தானும் உடன் இருப்பதாக கூறிவிட்டு உடனடியாக போனை கட் செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குற்றாலநாதன் அக்காவை மருத்துவமனையில் சென்று பார்க்க வேண்டும் என்றும், அவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படும் என்றும் கேட்பதற்காக தொடர்ந்து சந்திரனுக்கு கால் செய்தார். ஆனால், சந்திரனோ போனை கட் செய்து வந்தார்.
இதனால் சந்தேகமடைந்த குற்றலநாதன் தனது அக்காவை தேடி அவர்களின் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் கதவு வெளிப் புறமாக தாழிடப்பட்டு பூட்டியிருந்தது. மேலும் வீட்டில் ஒருவரும் இல்லை. ஆனால், வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இதனால் மேலும் சந்தேகடைந்த அவர் அக்கம்பக்கத்தில் விசாரித்தார். அவர்கள் இரண்டு நாட்களாக வீடு பூட்டப்பட்டு கிடப்பதாக கூறவே அவருக்கு என்ன செய்வது என தெரியவில்லை.
தொடர்ந்து தனது மாமாவிற்கு போன் செய்யவே அது ஸ்விட்ஆஃப் ஆகியிருந்தது. இதையடுத்து குற்றாலநாதன் தென்காசி போலீஸ் நிலையில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சென்று வீட்டின் பூட்டை உடைத்து திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
கட்டிலில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், சித்ரா பிணமாக கிடந்தார். அவரது முகம் முற்றிலும் சிதைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் சித்ராவின் உடலைக்கைப்பற்றி அதை பிரேத பரிசோதனைக்காக தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில்,
கணவன் – மனைவி இடையே இரண்டு நாட்களுக்கு முன் கடுமையான தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. கணவன் வேலைக்கு செல்லாமல் இருப்பதை சித்ரா கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்திரன், தனது மனைவி சித்ராவின் முகத்தை துணியால் மூடி சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் நிலை குலைந்த அவரை கட்டிலில் படுக்க வைத்து கை, கால்களை கயிற்றால் கட்டி துணியால் முகத்தை அமுக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சித்ரா அந்த இடத்திலேயே துடிதுடிக்க இறந்துவிட்டார். பின்னர் செய்வதறியாது, போலீசில் மாட்டிக்கொள்வோமோ என்ற அச்சத்தில், வீட்டை பூட்டிவிட்டு அக்கம்பக்கத்தினரிடம் மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு அவர் தப்பித்து சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து, தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு நாகசங்கர், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எனினும் தப்பியோடிய சத்திரன் பிடிபட்ட பின்னரே கொலைக்கான முழு காரணமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர், எனவே சந்திரனை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
பூட்டிய வீட்டில் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாபிக்ஸ்