சமூக ஆர்வலர் மீது கார் ஏற்றி கொலை முயற்சி: எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு புகார்!
Thoothukudi Crime News: தூத்துக்குடி அருகே கஞ்சாவிற்கு எதிராக போராடிய சமூக ஆர்வலரை கொலை செய்ய முயன்ற நபரை கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உடன்குடியில் சமூக ஆர்வலர் குணசீலனை காரை கொண்டு மோதுவது போல் அச்சுறுத்தி கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய வலியுறுத்தி சமூக செயல்பாட்டாளர்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சுப.உதயகுமார் தலைமையில் சமூக ஆர்வலர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள மனுவில்," தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபகாலமாக சமூக பணிகள் சட்டத்திற்கு உட்பட்டு செய்பவர்கள் சமூக விரோதிகளால் தாக்கப்படுவதும் காவல்துறை இது குறித்து நடவடிக்கை எடுக்காத நிலை இருப்பதும் அதிகரித்து வருவது வேதனை தரும் விடயமாக உள்ளது.
சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதை காவல்துறைக்கு தகவல் கொடுத்து தடுக்க முயன்ற சமூக ஆர்வலர் பாலகுமரேசன் கஞ்சா விற்பனை செய்யும் ரவுடிகளால் தாங்கப்பட்டது. நாங்கள் அறித்ததே. தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் சமூக செயற்பாட்டாளராகவும், சுற்றுச்சூழல் ஆர்வலராகவும், பொதுமக்களுக்கு ஆதரவாகவும் இயற்கை வளங்களை காக்கவும் பொதுநல தோக்கில் செயல்பட்டு வருபவர் சமூக செயல்பாட்டாளர் குணசிலன் அவர்கள் பல்வேறு பிரச்னைகளில் பொது மக்களுக்கு ஆதரவாக நின்று போராடி வருகிறார்.
உடன்குடியின் சார்பதிவாளர் அலுவலகம் வாடகை கட்டிடத்தின் இயங்கி வருகிறது. மேற்படி கட்டிடத்தை தனியார் ஒருவரின் சுய லாபத்துக்காக ஊரிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதிக்கு இடமாற்றம் செய்ய ஒரு சிலர் முயற்சித்தனர். இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் குணசீலன் உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்கம், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் இணைந்து அதனை சட்டத்திற்கு உட்பட்டு எதிர்த்து வந்தார்கள்.
இது தொடர்பாக குணசீலன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதனால் தற்போது மேற்படி பத்திரப்பதிவு அலுவலகம் மாற்றம் தொடர்பான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தனக்கு தொழில் பாதிப்பு ஏற்படுவதாக குலசேகரன்பட்டினம் லாந்துமாகுடி தெரு பகுதியில் வசிக்கும் ஜினைத் என்பவர் மகன் அப்துல் ஹமீது என்பவர் அவரை எதிரியாக பாவித்து குணசீலன் மீது முன் விரோதத்துடன் செயல்பட்டு வந்தார்.
இந்திலையில் கடந்த 24-1-2023 மாலை 4.40 மணியளவில் குணசீலன், உடன்குடி ஆர்சி சர்ச் அருகில் அவரது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு நேர் எதிரில் சில்வர் கலர் நிறம் உள்ள ஆடி காரில் வந்த அப்துல் ஹமீது அதிவேகமாக காரை ஓட்டி குணசீலனை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அவர் சுதாரித்து செயல்பட்டதால் மயிரிழையில் உயிர்தப்பினார்.
இது தொடர்பாக குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் கடந்த 24-1-2021 அன்று குனசீலன் புகார் கொடுத்து உள்ளார். ஆனால், இன்று வரை இந்த சம்பவம் குறித்து முறையான நடவடிக்கையோ, வழக்குப்பதிவோ, விசாரணையோ செய்யவில்லை.
எனவே தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சமூக செயல்பாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும். சமூக செயல்பாட்டாளர் குணசீலன் மீது தாக்குதல் நடத்த முயன்ற சமூக விரோதிகள் மீது வழக்கு பதிவு செய்யவும். சமூக செயல்பட்டாளர் குணசீலன் உயிருக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்." என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்