ராமஜெயம் கொலை வழக்கில் திருப்பம்: 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை
தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கில் அடுத்த திருப்பமாக 13 பேரிடம் இன்று முதல் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படவுள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபருமான ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கில் 13 பேரிடம் இன்று சென்னையில் உண்மைக் கண்டறியும் சோதனை நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ட்ரெண்டிங் செய்திகள்
தொழிலதிபர் ராமஜெயம் 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியும் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த கொலை வழக்கை தற்போது சிறப்புப் புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்த ஸ்பெஷல் டீமில் 40 பேர் கொண்ட குழு பல்வேறு கோணங்களில் பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.
ராமஜெயம் கொலை நடந்த காலகட்டத்தில் திருச்சியில் முகாமிட்டிருந்த ரவுடி கும்பல் பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
அந்தப் பட்டியலில் 13 ரவுடிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இவர்களிடம் தான் உண்மை கண்டறியும் சோதனை இன்று நடத்தப்படவுள்ளது. இதற்கான அனுமதியை திருச்சி மாஜிஸ்திரேட் கடந்த மாதம் அளித்தார்.
அதன்படி, இன்று முதல் வரும் 22ஆம் தேதி வரை சென்னையில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்தில் நிபுணர்களின் முன்னிலையில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சிறப்புப் புலனாய்வு குழு அழைப்பாணை அனுப்பியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னணி
ராமஜெயம், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அதிகாலை நடைப்பயிற்சி சென்ற போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். பரபரப்பாக தேடி வந்த நிலையில் அவரது உடல் கல்லணை சாலையில் உள்ள காவிரிக் கரையோரம், கை, கால்கள் இரும்புக் கம்பியால் கட்டப்பட்டு கண்டெடுக்கப்பட்டது.
தமிழ்நாடு காவல்துறை, சிபிசிஐடி, சிபிஐ என மாறி மாறி விசாரித்தும் அவரது கொலைக்கான காரணம் என்ன என்ற தகவலைக் கண்டறிய முடியவில்லை. தற்போது இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.
ராமஜெயத்தின் நெருங்கிய உறவினர்களிடமும் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
ராமஜெயம் கொலை வழக்கு குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் வெகுமதியாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்