ஈரோடு கிழக்கில் பாமக போட்டியில்லை: யாரையும் ஆதரிக்கமாட்டோம் – அன்புமணி ராமதாஸ்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடாது என்றும், யாருக்கும் ஆதரவு தெரிவிக்காது என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, அதன் நிலைப்பாடு குறித்து ஒவ்வொரு கட்சியும் தங்களின் விருப்பங்களை தெரிவித்து வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது -
தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், அதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழு கட்சியின் நிறுவனர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கூடி விவாதித்தது. கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உள்ளிட்ட உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இடைத்தேர்தல்கள் தேவையற்றவை. மக்களின் வரிப் பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பவை. அதனால் சட்டமன்ற உறுப்பினர் காலமானதாலோ, கட்சித் தாவியதாலோ சட்டப்பேரவை உறுப்பினர் பதவி காலியானால் அங்கு இடைத்தேர்தல் நடத்தத் தேவையில்லை. அங்கு பொதுத்தேர்தலில் எந்தக்கட்சி வெற்றி பெற்றதோ அதே கட்சியைச் சேர்ந்த ஒருவரை சட்டமன்ற உறுப்பினராக்கிவிடலாம் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. இதையே பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.
அதன்படியே ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிடுவதில்லை எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என்று உயர்நிலைக்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்