Crime: விவாகரத்து ஆகாத பெண்ணை மணக்க இருந்த புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு!
விவாகரத்து ஆகாத பெண்ணை மணக்க இருந்த புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவொற்றியூர் தியாகராஜபுரத்தைச் சேர்ந்தவர் யுகேஷ்குமார் (25). தனியார் நிறுவன ஊழியரான இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் பவானி. திருமணமான இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரைப் பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இவரது விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்தநிலையில் பவானியை யுகேஷ்குமார் திருமணம் செய்துகொள்ள விரும்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து இவர்களுக்கு திருமணம் செய்துவைக்க இரு குடும்பத்தினரும் முடிவு செய்து நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. அடுத்த மாதம் 25ம் தேதி யுகேஷ்குமார் மற்றும் பவானிக்கு திருமணம் நடப்பதாக உறுதிசெய்யப்பட்டது.
திருமணம் நடைபெறவிருந்த நிலையில், பவானி தனது விவாகரத்து வழக்கு முடியவில்லை, எனவே விவாகரத்து கிடைத்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சில தினங்களுக்கு முன்பு யுகேஷ்குமாரிடம் கூறியுள்ளார். இதனால் யுகேஷ்குமாருக்கும், பவானிக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த யுகேஷ்குமார் நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
மாலையில் வீட்டின் முதல் மாடியில் இருந்த யுகேஷ்குமார், வெகுநேரமாக கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் மேலே சென்று பார்த்தபோது, அங்கு யுகேஷ்குமார் மின்விசிறியில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருவொற்றியூர் போலீசார் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து யுகேஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.
மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
டாபிக்ஸ்