’யார் அப்பன் வீட்டு பணம்! போய் பாஜகவுல சேந்துக்கோ’ ஆளுநரை விளாசிய துரைமுருகன்
Minister Duraimurugan about Governor RN Ravi:- இந்திய குடிமகனாக இருக்கவே லாயக்கு இல்லாமல் இருப்பவன்தான் அரசியல் சட்டத்திற்கு எதிர்ப்பாக இருக்க முடியும். உங்கள் கட்சிக்கு ஒரு கொள்கை இருந்தால் ராஜினாமா பண்ணீட்டு போங்கோ - அமைச்சர் துரைமுருகன் பேச்சு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டப்பேரவை விதியை தளர்த்தி ஆளுநருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது அமைச்சரும் அவை முன்னவருமான துரைமுருகன் பேசுகையில், இந்த தீர்மானத்தை சரியான நேரத்தில் நம்முடைய முதல்வர் அவர்கள் கொண்டு வந்துள்ளார்கள். அந்த தீர்மானத்தில் கொஞ்சம் கூட பிசிறு இல்லாமல் நாகரீகத்தோடு நியாயத்தை எடுத்துரைக்கிற வகையில் காழ்ப்புணர்ச்சி சிறிதுமின்றி வாக்கியங்கள் அமைக்கப்பட்டிருப்பதை நான் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்.
ட்ரெண்டிங் செய்திகள்
விதியை தளர்த்துவதை கற்றுக்கொடுத்தவர்களே அதிமுகதான்
ஏதோ கவர்னருக்கு எதிர்ப்பான கருத்தை கொண்ட தீர்மானம் வருகிறது என்ற உடன் எதிர்க்கட்சிக்கள் அப்படியே துள்ளிக்குதித்து ’இது பஞ்சமா பாதக்கத்தில் ஒன்று இதில் எப்படி நாங்கள் கலந்து கொள்வது’ என்று போய் இருந்தாலும் பரவாயில்லை. ’சட்டமன்ற விதிகளை எல்லாம் தளர்த்தி அல்லவா கொண்டு வருகிறீர்கள்’ என்றார்கள். சட்டமன்ற விதிகளை எல்லாம் தளர்த்துவது என்பதையே கற்றுக் கொடுத்தவர்களே அவர்கள்தான்.
சட்டமன்ற விதிகளை தளர்த்தியே சென்னா ரெட்டி மீது பாய்ந்தார்கள். அதே சட்டமன்ற விதியை தளர்த்தும் போது பத்தினிகள் ஆகிவிட்டார்கள்.
ஆட்சிக்கு வருவோமா என்று தெரியாத போதே ஆளுரை எதிர்த்தோம்
ஒரு கனத்தை இதயத்தோடுத்தான் இந்த தீர்மானத்தை முதல்வர் கொண்டு வந்து இருப்பார்கள்.கவர்னர் பதவி தேவையில்லை என்பது எங்கள் கட்சி தோன்றியபோதே பிரகடனப்படுத்தி உள்ளது. நாங்களெல்லாம் ஆளுங்கட்சியாக வருவோமோ என்று தெரியாதபோதே கவர்னர் தேவையில்லை என்று தெரிவித்த கட்சி திமுக.
அரசியல் நிர்ணய சபையில் பேசியவர்கள் கூட கவர்னர் தேவையில்லை என்றுதான் சிலர் சொன்னார்கள். ஆனால் மத்திய சர்க்காருக்கு மாநில சர்க்காரை ஆட்டிப்படைக்கவும், 365 சட்டப்பிரிவை பயன்படுத்தி கலைக்க தங்களுக்கு ஒரு ஏஜெண்டு வேண்டும் என்று கவர்னர் பதவியை உருவாக்கினார்கள்.
பல மாநிலங்களில் ஏற்பட்ட குழப்பங்களுக்கெல்லாம் காரணம் கவர்னர்கள்தான். முதல்முதலாக தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை கலைத்தது கேரளாவில் நம்பூதிரிபாட் ஆட்சியைத்தான்.
நாக்கை தொங்கப்போடுவார்கள்
மேற்கு வங்கத்தில் மம்தாவோடு செய்த தகராறு காரணாமாக ’சபாஷ் கொட்டி’ அவரை ராஜ்ஜியசபா தலைவராக்கி உள்ளார்கள். அதை பார்த்துதான் நம்முடைய கவர்னருக்கு ஒரு நப்பாசை; அடடா வங்கத்திலே அவர் செய்து அவர் ஆயிருக்கிறாரே அக்லிஸ்ட் நமக்கு இது கிடைக்காதா என்று நாக்கை தொங்கப்போடுவார்கள்.
வாயை வைத்துக் கொண்டு ஆளுநர் சும்மா இருக்க வேண்டும்
ஆளுநரை போய் பலமுறை நாங்கள் பார்த்துள்ளோம். முதல்வரோடு நான் போயுள்ளேன் பேசி உள்ளோம். ஆனால் பேசினோமே தவிர காரியம் ஒன்றும் நடக்கவில்லை. இவர் மனதில் ஒரு மாதிரியாக உள்ளே வைத்துக் கொண்டு பேசுகிறார். அவர் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை; வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டும்.
ஆளுநரை உரையில் மாநில அரசு சொன்னதற்கு மாறாக மாற்றி படித்த போது ‘மாநிலத்தின் நிலைமை தெரியாமல் கூறுகெட்டத்தனமாக பேசினால் இதுதான் நிலை’ என்று ஹிந்து பத்திரிக்கை தனது தலையங்கத்தில் எழுதியது.
அரசியல் சட்டத்தில் உள்ள ஓட்டை
ஆளுநருக்கு ஒரு மசோதாவின் மீது சந்தேகம் இருந்தால் குடியரசு தலைவருக்கு அனுப்பவேண்டும், இல்லை என்றால் அவரே வைத்துக் கொள்ளலாம், எவ்வுளவு நாள் வைத்துக் கொள்ளலாம் சாகும்வரை வைத்துக் கொள்ளலாம். இதான் அரசியல் சட்டத்தில் உள்ள ஓட்டை; அதற்கு கால நிர்ணயம் வேண்டும் என்று முதல்வர் சொல்லி உள்ளார்.
இரு மசோதாவில் சந்தேகம் இருந்தால் அந்த சந்தேகத்திற்கான பதிலை மாநில அரசு அனுப்ப வேண்டும். திருப்பி அனுப்பினால் அதை எக்காரணம் கொண்டும் இதனை நிறுத்தக்கூடாது. இதுதான் சட்டம்.
”ராஜினாமா பண்ணீட்டு போங்கோ”
இந்திய குடிமகனாக இருக்கவே லாயக்கு இல்லாமல் இருப்பவன்தான் அரசியல் சட்டத்திற்கு எதிர்ப்பாக இருக்க முடியும். உங்கள் கட்சிக்கு ஒரு கொள்கை இருந்தால் ராஜினாமா பண்ணீட்டு போங்கோ.
”யார் அப்பன் வீட்டுப்பணம்”
குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் ஒலிபரப்பட்ட படத்தில் காந்தி, நேரு படம் இல்லை; சாவர்க்கர் படம்தான் இருந்தது. யார் அப்பன் வீட்டு பணத்தை கொண்டுப்போய் இத காட்டுற; பாஜகவாக இருந்தால் ’போய் சேர்ந்துகோ அந்த கட்சில’ என்று துரைமுருகன் ஆக்ரோஷமாக பேசினார். மேலும் நாங்கள் சென்னா ரெட்டி மீது கல் விட்டு அடித்தது போல் செய்யமாட்டோம் என்றும் அவர் கூறினார்.