Trichy Crime: மூதாட்டியை கட்டிப்போட்டு கொடூரமாக கொன்ற கும்பல்; அதிர வைக்கும் காரணம்
Trichy Crime: வீட்டுக்குள் ராஜேஸ்வரி கை, கால்கள், வாய் ஆகியவை துண்டால் கட்டப்பட்டு இருந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
திருச்சி அருகே மூதாட்டியை நகைக்காக கட்டிப்போட்டு கொடூரமாக கொலை செய்து விட்டு 63 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுரா நகரை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மனைவி ராஜேஸ்வரி இவருக்கு வயது 65. இந்த தம்பதிக்கு மணிகண்டன் என்ற மகனும், சத்யபிரியா என்ற மகளும் உள்ளனர். மகன், மகளுக்கு திருமணமாகி விட்டது. கருப்பண்ணன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதில் மகன் மணிகண்டன் நாமக்கல் அருகே வளையப்பட்டியில் மருந்துகடை வைத்துள்ளார். அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகள் சத்யபிரியா திருமணமாகி திண்டுக்கல்லில் கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜேஸ்வரி மட்டும் தொட்டியத்தில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று ராஜேஸ்வரி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. வீடும் பூட்டி இருந்ததாக கூறப்படுகறிது. அப்பகுதியில் இருந்தவர்கள் தொட்டியம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து ராஜேஸ்வரி வீட்டின் உள்ளே சென்று பார்வையிட்டனர். அப்போது, வீட்டுக்குள் ராஜேஸ்வரி கை, கால்கள், வாய் ஆகியவை துண்டால் கட்டப்பட்டு இருந்த நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.
இதனால் அவர் 4 நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் உள்ள பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. ராஜேஸ்வரி தனியாக இருப்பதை நன்றாக நோட்டம் விட்ட ஆசாமிகள் வீட்டுக்குள் நுழைந்து ராஜேஸ்வரி சத்தம் போடாமல் இருப்பதற்காக அவரது கை, கால்களை மற்றும் வாயை துணியால் கட்டி கொள்ளையடித்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் ராஜேஸ்வரி வீட்டில் இருந்த 63½ பவுன் தங்க நகை மற்றும் ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
டாபிக்ஸ்