Erode Bypolls: அனல் பறக்கும் தேர்தல் களம்; 11 மணி வாக்குசதவீத நிலவரம் இங்கே!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 11 மணி நிலவரப்படி எவ்வளவு வாக்குகள் பதிவாகி உள்ளது தொடர்பான விபரங்கள் வெளியாகி உள்ளன
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 52 இடங்களில் உள்ள 238 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வமாக தங்களது வாக்குகளை காலை 7 மணி முதல் ஆர்வமாக செலுத்தி வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி 10.1 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகி இருந்தது. இந்த நிலையில் 11 மணி நிலவரப்படி 27.89 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. ஆண் வாக்காளர்கள் 32, 562 பேரும், 30, 907 வாக்களார்களும் வாக்களித்து உள்ளனர். ஈரோடு தொகுதியில் மொத்தம் 2.27 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் கடந்த 4 மணிநேரத்தில் 63,469 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்
முன்னதாக, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா அண்மையில் காலமானார். அவர் மறைவைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இன்றைய தினம் (பிப்ரவரி 27/2023) இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். கடந்த ஜனவரி 31-ம் தேதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, கடந்த 7ஆம் தேதி நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து, வேட்புமனு பரிசீலனை நிறைவடைந்தது. இதில் 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 6 வேட்பாளர்கள் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர். கடந்த 10 ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, தே.மு.தி.க சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.
குறிப்பாக ஆளும் கட்சியான திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். எதிர்கட்சியான அ.தி.மு.க சார்பில் வேட்பாளர் தென்னரசை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரும், தேமுதிக சார்பில் போட்டியிடும் ஆனந்தை ஆதரித்து அந்தக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜய்காந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மேனகா நவநீதனை ஆதரித்து அந்தக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேர்தல் விதிகளின்படி நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. இந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. காலை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவை முன்னிட்டு 2500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருக்கின்றனர். துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். ஈரோடு இடைத்தேர்தல் நாளை வாக்குப்பதிவு முடிந்து, மார்ச் மாதம் 2-ம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படவிருக்கிறது.
டாபிக்ஸ்