Chennai : மீண்டும் ரயில் விபத்து.. அதுவும் சென்னையில்.. பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் தடம் புரண்டது!
Electric train derailed : சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூர் நோக்கி பயணிகளை ஏற்றுக்கொண்டு சென்ற மின்சார ரயில் ஒன்று பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென அந்த ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின. இதனை சுதாரித்துக்கொண்ட ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இதனை தொடர்ந்து உடனடியாக ரயில் தடம் புரண்ட சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் பெட்டியின் 4 சக்கரங்களையும் இயல்பு நிலைக்கு கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உடனடியாக ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதால் தடம் புரண்ட பெட்டியில் இருந்த பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை கூறப்படுகிறது. மின்சார ரயில் தடம் புரண்ட சம்பவம் தொடர்பாக ரயில்வே நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.
முன்னதாக ஒடிசாவில் கடந்த 2அம் தேதி மாலை பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையத்தில் பெங்களுரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று தனித்தனி ரயில்கள் மோதியதில் 17 ரயில் பெட்டிகள் முழுமையாக தடம் புரண்டன.இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேபோல கடந்த 4 ஆம் தேதி சென்னை - கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டியில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டது. உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து செங்கோட்டை வழியாக சென்னைக்கு நாள்தோறும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பகல் 12 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் ரயில், மாலை 3.10 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும். பின்னர் அங்கிருந்து 3.40 மணிக்கு புறப்படும் மறுநாள் அதிகாலை சென்னையை வந்தடையும்.
இந்த நிலையில், செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலை அங்கு பணியாற்றும் ஊழியர்கள் வழக்கம் போல் சோதனை செய்தனர். அப்போது, எஸ்-3 பெட்டியில் விரிசல் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த பெட்டி கழற்றி விடப்பட்டது. அதில் இருந்த பயணிகளுக்கு வேறு பெட்டியில் இடம் வழங்கப்பட்டது. உரிய நேரத்தில் ரயில் பெட்டி கழற்றி விடப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.