வேட்பாளரா என்னை நிறுத்துங்க! ஈரோடு காங். மாவட்ட தலைவர் கண்ணீர் மல்க பேட்டி
‘’உழைத்தவர்களுக்கு கண்டிப்பாக சீட்டு தர வேண்டும் என்பது அனைவரின் விருப்பம், அதை கட்சி செய்யும் என எதிர்பார்க்கிறேன்''
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில், கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்கு பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் மற்றும் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் ஆகியோர் போட்டியிட வாய்ப்பு கேட்டு மேலிடப்பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவிடம் மனுவினை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மக்கள் ராஜன் கூறுகையில்,
ட்ரெண்டிங் செய்திகள்
’’கட்டாயமாக சீட் வேண்டும்’’
எதிர்பாராத விதமாக திருமகன் ஈவெரா இறந்தார், அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே கொடுத்ததற்கு திமுகவுக்கு நன்றி. ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று நான் விருப்பமாக உள்ளேன். கட்டாயமாக அந்த தொகுதியை எனக்கு ஒதுக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்தில் கேட்டுள்ளேன். ’கட்டாயமாக வேண்டுமென்று’ கேட்க எனக்கு உரிமை உள்ளது.
’’என் பணியை யாரும் மறுக்க முடியாது’’
1993ஆம் ஆண்டு முதல் மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், தமிழ்நாடு காங்கிரஸ் விவசாய அணியின் மாநில பொதுச்செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்த பின், கடந்த 5 ஆண்டுகாலமாக ஈரோட்டில் மாவட்ட தலைவராக பணியாற்றி வருகிறேன். நான் கட்சிக்காக வேலை செய்யவில்லை என்று யாரும் மறுக்கமுடியாது. கடந்த 2021ஆம் ஆண்டில் ராகுல்காந்தி, ஈரோட்டில் நடத்திய நெசவாளர் சந்திப்பை நான்தான் ஏற்பாடு செய்தேன். ஆளுநரை கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளேன்.
’’இளம் வயதில் தாய், தந்தையை இழந்தவன்’’
என் இளம் வயதில் அம்மா, அப்பாவை இழந்தவன், காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைத்து செயல்பட்டேன் (கண்கலங்குகிறார்). மரியாதைக்குரிய தினேஷ் குண்டுராவ்விடம் எனது கோரிக்கையை விடுத்துள்ளேன். மேலிடம் பரிசீலிக்கும் என எனக்கு தெரியும், 46 வயதாகும் இளைஞராக ஈரோடு கிழக்கு தொகுதியில் எனது பணியை சிறப்பாக செய்வேன். உழைத்தவர்களுக்கு கண்டிப்பாக சீட்டு தர வேண்டும் என்பது அனைவரின் விருப்பம், அதை கட்சி செய்யும் என எதிர்பார்க்கிறேன். திணேஷ் குண்டுராவ் எனது கோரிக்கையை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.
கேள்வி: கட்சி மேலிடம் எந்த முடிவை எடுத்தாலும் ஏற்பீர்களா ?
காங்கிரஸ் ஒரு ஜனநாயக கட்சி, உழைத்தவருக்கு மரியாதை தர வேண்டும் என்பதை திரும்ப திரும்ப வலியுறுத்தி கொண்டே இருப்பேன்.
கேள்வி: ஈரோடு தொகுதியில் சஞ்சய் சம்பத்திற்கு வாய்ப்பு கொடுத்தால் உங்கள் முடிவு என்ன?
அது யூகம்தான், தலைமை அறிவிக்கட்டும். ஈரோடு தொகுதியில் 30 ஆண்டுகளாக பணி செய்துள்ளேன். வெற்றி என்பது எளிதானது. அதிமுகவில் எல்லோரும் முகமூடி அணிந்துள்ளனர், அதற்கு பின்னால் ஆர்.எஸ்.எஸ் உள்ளது என மக்கள் ராஜன் தெரிவித்தார்.
டாபிக்ஸ்