POCSO: சகோதரி மகளுக்கு பாலியல் தொல்லை! தாய்மாமனுக்கு முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு!
”ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், குற்றவழக்கில் கூறப்படும் குற்றத்தின் தீவிரம் மற்றும் அதற்கு வழங்கப்படும் தண்டனை ஆகியவற்றை பொறுத்து முன் ஜாமீன் வழங்குவது குறித்து முடிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது”
14 வயது மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய் மாமனுக்கு முன் ஜாமீன் தர நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
முன்னாள் போலீஸ் உயர் அதிகாரியின் மகனுக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் இருவரும் நீதிமன்ற உத்தரவுப்படி தந்தை உடன் உள்ளனர்.
இந்த நிலையில் தாய் வீட்டுக்கு சென்று தங்களது பொர்டுகளை எடுத்து வர கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்றனர். அப்போது தாயார் திட்டியதுடன் தாயாரின் சகோதரர் கெட்ட வார்த்தைகளை கொண்டு திட்டி அடித்ததாகவும் 14 வயது மருமகளின் உடலை தொட்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து வடபழனி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போக்சோ சட்டத்தின் கீழ் தாயார் மற்றும் தாய்மாமன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாயார் மற்றும் தாய்மாமன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் புலன் விசாரணை முடிந்து விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது என தெரிவித்தார்.
இதை அடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், குற்றவழக்கில் கூறப்படும் குற்றத்தின் தீவிரம் மற்றும் அதற்கு வழங்கப்படும் தண்டனை ஆகியவற்றை பொறுத்து முன் ஜாமீன் வழங்குவது குறித்து முடிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி இந்த வழக்கில் தாய்மாமன் உடலை தொடரும்போது பார்த்துக் கொண்டிருந்த தாயார், இது குறித்து போலீசில் புகார் செய்யவில்லை. அதனால் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் தாயர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் தாயாருக்கு முன் ஜாமீன் வழங்குகிறேன்.
அவர் விசாரணை அதிகாரி முன்பு புதன் மறும் சனிக்கிழமைகளில் ஆஜராக வேண்டும். தாய்மாமனுக்கு எதிராக போலீசில் கொடுக்கப்படுள்ள வாக்குமூலத்தை படித்து பார்த்தேன். ஆதனால் அவருக்கு முன் ஜாமீன் வழங்க முடியாது. அவரது முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி கூறி உள்ளார்.