Annamalai: ’100 ஆண்டுகால நாகை மருத்துவமனையை மாற்றுவதா! அரசின் உண்மையான நோக்கம் என்ன’ திமுக அரசை சாடும் அண்ணாமலை!
”மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப், போதுமான பேருந்து வசதிகளோ, சாலை வசதிகளோ ஏற்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. அவசரகால சிகிச்சை, மகப்பேறு சிகிச்சை போன்றவற்றுக்கு, 15 கிமீ தொலைவில் உள்ள ஒரத்தூர் கிராமத்திற்குச் சென்று சிகிச்சை மேற்கொள்வது என்பது முற்றிலும் கடினமான ஒன்று”

நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையை மூடும் முயற்சியைக் கைவிட வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.
இடமாற்றம் செய்யப்படும் நாகை தலைமை மருத்துவமனை
இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், நாகப்பட்டினம் நகரப் பகுதிகளில், மீனவ மக்கள், விவசாயிகள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும், நகரைச் சுற்றியிருக்கும் கிராமப் பகுதிகளில் சுமார் 4 லட்சம் பொதுமக்களும் வசித்து வருகின்றனர். நாகப்பட்டினம் நகரில் அமைந்துள்ள அரசு தலைமை மருத்துவமனை, சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில், உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் சிகிச்சை பெற்று வந்தனர்.
ஒரத்தூரில் புதிய மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி
மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற நோக்கில், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், நாகப்பட்டினம் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க அனுமதி அளித்ததை அடுத்து, கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 7 அன்று, ஒரத்தூர் கிராமத்தில் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி 12 அன்று, நமது பிரதமர் அவர்கள், காணொளி மூலம் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி உட்பட, தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைத்தார்.