தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Teachers Counselling: அலர்ட் ஆசிரியர்களே! பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க வழிகாட்டுதல்கள்

Teachers Counselling: அலர்ட் ஆசிரியர்களே! பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க வழிகாட்டுதல்கள்

Priyadarshini R HT Tamil
Apr 28, 2023 01:05 PM IST

Teachers Transfer Counselling : அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 2022-2023ம் கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளம் மூலம் மே மாதம் நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடை நிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் மே மாதம் பொது மாறுதல் கலந்தாய்வை பள்ளிக் கல்வித்துறை நடத்தி, ஆசிரியர்கள் விரும்பும் இடங்களுக்கே மாறுதல் ஆணைகளை வழங்கி வருகிறது.

இதன்படி, 2021-2022ம் கல்வி ஆண்டிலும் பொது மாறுதல் வழங்கப்பட்டது.

இதையடுத்து, 2022-2023ம் கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல்களை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இந்த கலந்தாய்வில் பங்கேற்று விருப்ப மாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்கள் வியாழக்கிழமை (ஏப்.27) முதல் தங்கள் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்த கல்வி ஆண்டில் மாறுதல் கோரும் ஆசிரியர்கள் தற்போது பணியாற்றும் பள்ளியில் ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை கடைப்பிடிக்கத் தேவையில்லை. மாறுதல் கோரும் விண்ணப்பத்தில் முன்னுரிமை கோரி விண்ணப்பிக்கும்போது அதற்கான உரிய அலுவலரால் அளிக்கப்பட்ட ஆதாரத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தற்போது பணியாற்றும் பள்ளிக்கு மாறுதல் பெற்று வந்த வகையை உரிய ஆதாரத்துடன் இணைக்கவேண்டும். ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பங்களும் தலைமை ஆசிரியரின் ஒப்புதலுடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். பொதுமாறுதல் கலந்தாய்வு காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.

ஒரே ஒருமுறை மட்டுமே அனுமதி:

ஆசிரியர்கள் முன்னுரிமை அடிப்படையில் அவர்களது சுழற்சி வரும்போது உள்ள காலிப்பணியிடத்தை மட்டுமே தேர்வுசெய்ய ஒரேயொருமுறை மட்டும் அனுமதிக்கப்படுவர். அவரது சுழற்சி முடிந்த பின்னர் ஏற்படும் காலியிடத்தை தேர்வுசெய்ய அனுமதி கிடையாது.

மாவட்டம் விட்டு மாவட்டம் விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் கலந்தாய்வின்போது தற்போது பணியாற்றும் மாவட்டத்தை தவிர்த்து பிற மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடத்தை மட்டுமே தேர்வு செய்யவேண்டும்.

முன்னுரிமைப் பட்டியல் எப்போது?

ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல், காலிப்பணியிட விவரங்கள் மே 3ம் தேதி வெளியிடப்படும். முன்னுரிமைப் பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் இருந்தால் மே 4ம் தேதி தெரிவிக்கலாம்.

மாறுதல் விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமைப் பட்டியல்கள் மே 5ம் தேதி வெளியிடப்படும். மே 8ம் தேதி மலைச் சுழற்சி மாறுதல் கலந்தாய்வு தொடங்கும். அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் கோட்டத்துக்குள்) 8ம் தேதி நடைபெறும். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு 9ம் தேதி காலையில் நடைபெறும்.

அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்), கடந்த ஆண்டுகளில் பணி நிரவல் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை மீண்டும் தாய் ஒன்றியத்துக்கு ஈர்த்தல் ஆகியவை மே 10ம் தேதி நடைபெறும்.

அரசு மற்றும் நகராட்சி முதுநிலை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் நிலை- 1, உடற்கல்வி இயக்குநர் நிலை-1, தொழிற்கல்வி ஆசிரியர்கள் மாறுதல் வருவாய் மாவட்டத்துக்குள் கடந்த ஆண்டுகளில் பணி நிரவல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை மீண்டும் தாய் ஒன்றியத்துக்கே ஈர்த்தல் ஆகியவை மே 11ம் தேதி நடைபெறும்.

இதன்படி படிப்படியாக ஆசிரியர்கள் நிலையில் கலந்தாய்வு மே 31ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இதுதொடர்பான விவரங்களை பள்ளிக்கல்வி ஆணையர் சு.நந்தக்குமார், தொடக்கக்கல்வி இயக்குநர் க.அறிவொளி ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்