AIADMK: அதிமுக செயற்குழுக் கூட்டம் திடீர் ரத்து-இபிஎஸ் அறிவிப்பு.. காரணம் என்ன?
Edapadi K Palanisamy: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம் 7.4.2023 அன்று நடைபெறும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
அதிமுக செயற்குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இதுதொடர்பாக அதிமுக தலைமைச் செயலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம் 7.4.2023 அன்று நடைபெறும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
ஒரு சில காரணங்களால், 7.4.2023-வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுவதாக இருந்த கழக செயற்குழுக் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பதில் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதுவும் திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் கூட்டங்கள் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து நிர்வாகிகள் கூட்டம் அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்படுவதால் அதிமுகவினர் குழப்பம் அடைந்துள்ளனர்.
செயற்குழுக் கூட்டம் அடுத்து எப்போது நடைபெறும் என்பது தொடர்பான தேதி விரைவில் வெளியிடப்படும் என அதிமுகவின் நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்