Womens IPL: ஐபிஎல்-க்கு முன்னரே மகளிர் ஐபிஎல் தொடர்…மேலும் முக்கிய தகவல்கள்
மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 4ஆம் தேதி தொடங்கும் எனவும், அனைத்து போட்டிகளும் மும்பையில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2008இல் தொடங்கி இதுவரை 15 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டில் முதல் முறையாக மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளன.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த தொடரில் மொத்தம் 5 அணிகள் ஏலம் மூலம் எடுக்கப்பட்டன. மகளிர் கிரிக்கெட் அணி ஏலம் மூலம் பிசிசிஐக்கு ரூ. 4,669.9 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அத்துடன் ஊடக ஒளிபரப்பு உரிமை மூலம் ரூ. 951 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இதையடுத்து மகளிர் ஐபிஎஸ் போட்டி தொடங்கும் தேதி மற்றும் போட்டி நடக்கும் இடம் குறித்து ஐபிஎல் தலைவர் அரும் துமால் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
மகளிர் பிரிமீயர் லீக் மார்ச் மாதம் 4ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை மும்பையில் நடைபெறுகிறது. வரும் 13ஆம் தேதி மகளிர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீராங்கனைகள் ஏலம் மும்பையில் நடைபெறுகிறது.
ஒவ்வொரு அணியும் தலா 15 வீரர்கள் முதல் 18 வீரர்கள் வரை ஏலத்தில் எடுக்கலாம். அணியில் மொத்தம் 5 வெளிநாட்டு வீராங்கனைகளை தேர்வு செய்யலாம். அந்த 5 பேரில் 1 அசோசியேட் வீராங்கனையை தேர்வு செய்ய வேண்டும்.
சுமார் 1500 வீராங்கனைகள் வரை மகளிர் ஐபிஎல் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளனர். ஒவ்வொரு அணியும் ரூ. 12 கோடி வரை வீரங்கனைகளை ஏலம் எடுக்க செலவிட வேண்டும்.
மகளிர் ஐபிஎல் தொடரில் மொத்தம் 22 போட்டிகள் நடைபெறும். புள்ளிபட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களை பிடிக்கும் அணிகள் தங்களுக்குள் மோதி அதில் வெற்றி பெறும் அணி இறுதிபோட்டிக்கு முன்னேறும்.
மும்பையிலுள்ள பார்போர்ன் மைதானம், டிஒய் பாடீல் மைதானங்களில் அனைத்து போட்டிகளும் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மகளிர் ஐபிஎல் அணிகளை குஜராத், மும்பை, பெங்களூரு, டெல்லி, லக்னெள ஆகிய ஐபிஎல் அணிகள் வாங்கியுள்ளன.