ind vs Nz 1st odi:டாப் ஆர்டர் தரம்! வாஷிங்டன் தூள் பினிஷ்!நியூசி.க்கு 307 இலக்கு
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அரைசதம் அடிக்க, கடைசி நேரத்தில் வாஷிங்டன் சுந்தரின் அதிரடி பினிஷ் மூலம் இந்திய அணி 306 ரன்கள் குவித்துள்ளது.
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை 1-0 என வென்ற நிலையில் தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் இளம் வீரர்களான அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகியோர் ஒரு நாள் போட்டிகளில் அறிமுக வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.
இந்தியாவின் தொடக்க பேட்ஸ்மேன்களான கேப்டன் ஷிகர் தவான், சுப்மன் கில் ஆகியோர் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை தந்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்தனர்.
தவான் 72, கில் 50 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இவர்களுக்கு அடுத்தபடியாக வந்த ஷ்ரேயாஸ் ஐயர் ஆரம்பத்தில் இருந்தே ரன் குவிப்பில் ஈடுபட தொடங்கினார். இதனால் அணியின் ஸ்கோரும் சீராக உயர்ந்தது.
தொடர்ச்சியாக பேட்டிங்கில் சொதப்பி வரும் ரிஷப் பண்ட் இந்தப் போட்டியிலும் பெரிதாக ரன்குவிப்பில் ஈடுபடவில்லை. 15 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றினார். அதேபோல் டி20 கிரிக்கெட்டில் உச்சகட்ட பார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவ் 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார்.
இதையடுத்து நீண்ட காலமாக பெஞ்சில் அமரவைக்கப்பட்டு வாய்ப்பை பெற்ற சஞ்சு சாம்சன் 36 ரன்கள் எடுத்தார்.
ஆட்டத்தின் 46வது ஓவரில் களமிறங்கிய பெளலிங் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 3 சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்த அவர் 16 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். அவரது தூள் கிளப்பிய பினிஷிங்கால் இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்தது.
கடைசி ஓவர் வரை பேட் செய்த ஷ்ரேயாஸ் ஐயர் 76 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து அணியை பொறுத்தவரை செளத்தி, பெர்குசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 307 ரன்கள் என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி பேட் செய்து வருகிறது.
டாபிக்ஸ்