Karnataka Election: காங்கிரஸிடம் ஆட்சியை பறிகொடுக்கும் பாஜக! கருத்து கணிப்பில் அதிர்ச்சி தகவல்!
106 முதல் 116 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
224 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் வரும் மே 10ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 40 சதவீத கமிஷன், முஸ்லீம்கள் இடஒதுக்கீடு ரத்து, அமூல் மற்றும் நந்தினி பால் விவகாரங்கள், ஹிஜாப் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களை முக்கிய பிரச்னைகளாக வைத்து காங்கிரஸ் கட்சியினர் ஆளும் பாஜகவுக்கு எதிராக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
தென்னிந்தியாவில் பாஜக நேரடியாக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா என்பதால் நாடு முழுவதும் கர்நாடக தேர்தல் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இதற்கு முன்னர் இரண்டு முறை பாஜக கர்நாடகாவில் ஆட்சி அமைத்து இருந்தாலும் ஒரு முறை கூட ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்களை பாஜக வென்றது இல்லை.
இந்த நிலையில் எப்படியாவது தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு களப்பணிகளை செய்து வருகிறது.
இந்த நிலையில் ஆட்சி அமைக்க தேவையான பெருமான்மை தொகுதிகளை பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என டிவி 9 கன்னடா மற்றும் சி ஓட்டர் நிறுவனங்கள் 21,895 பேரை சந்தித்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் மூன்று முனை போட்டி நிலவி வருகிறது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 223 தொகுதிகளிலும் பாஜக 224 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி 207 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர்.
106 முதல் 116 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் பாஜக 79 முதல் 89 தொகுதிகள் வரை கைப்பற்றி ஆட்சியை இழக்க வாய்ப்புள்ளதாகவும், மூன்றாவது பெரிய கட்சியான மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி 24 முதல் 34 வரை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 5 தொகுதிகள் வரை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் டிவி 9 கன்னடா மற்றும் சி ஓட்டர் நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.